ஹரிணியை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளியிட்ட அநுர தரப்பு
பிரதமர் பதவியில் மாற்றம் செய்வது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கூறுவது போல அரசாங்கத்திற்குள் எவ்வித குழப்பகரமான மற்றும் நெருக்கடி நிலையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பரப்பில் சர்ச்சை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்சவினால் விண்ணிற்கு செலுத்தப்பட்ட சுப்ரீம் சட் 1 என்ற செய்மதி தொடர்பில் பிரதமர் ஹரிணி தெரிவித்த கருத்துக்கள் அரசியல் பரப்பில் சர்ச்சையான நிலைமையை தோற்றுவித்துள்ளன.
பிரதமருடைய இந்த கருத்தினால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குள் உள்ளக மோதல்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போது, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, அரசாங்கத்திற்குள் பிரதமர் ஹரிணி தெரிவித்த கருத்துக்களால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பிரதமர் பதவியில் இருந்து ஹரிணியை நீக்கிவிட்டு பிமல் ரத்நாயக்கவை அந்த பதவிக்கு நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் பிரசாரம்
உதய கம்மன்பிலவின் மேற்கண்ட கருத்து தொடர்பில் பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க மேலும் தெரிவிக்கையில்,
உதய கம்மன்பில கூறுவது போன்று அரசாங்கத்திற்குள் எந்தவொரு நெருக்கடியும் இல்லை. பிரதமர் பதவியில் மாற்றம் மேற்கொள்ள ஒரு குழு முயற்சிப்பதாக உதய கம்மன்பில கூறியது அப்பட்டமான பொய்.
கம்மன்பில எப்போது தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக ஆனார் என்பது எனக்குத் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, ரோஹித ராஜபக்சவின் செய்மதிக்கு இலங்கை அரசாங்கத்தினால் முதலீடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்திருந்தார்.
எனினும், மறுநாள் பிரதமர் தெரிவித்த கருத்துக்கு முரணாக, அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதமர் தெரிவித்த கருத்து முரண்பாடானது என்றும், சரியான தகவல் அல்ல என்பது போன்றும் கருத்துக்களை வெளியிட்டார்.
இதனையடுத்து அரசியல் பரப்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதுடன், பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




