ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு
இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படை, தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளதாக கடற்றொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வங்க கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று (23.11.2022) காலை இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலாளர்கள் சுமார் 400இற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர்.
கடற்படையிரானால் தாக்குதல்
நேற்று மாலை கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட அதி நவீன ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், கடற்றொழிலாளர்களை எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதாக ஒலி பெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து இன்று (24.11.2022) காலை கடற்றொழிலாளர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடற்றொழிலாளர்களை நோக்கி கற்களை கொண்டு வீசி விரட்டியடித்ததுடன், 20க்கும் மேற்பட்ட இராமேஸ்வரம் மீன்பிடி விசைப்படகுகளில் ஏறிய இலங்கை கடற்படை வீரர்கள் படகில் இருந்த கடற்றொழிலாளர்களை சரமாரியாக தாக்கி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், இறால், மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்டவைகளை அள்ளி சென்றதுடன், மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளதாக தெரியவருகிறது.
இதனால் கடற்றொழிலாளர்கள் கைது நடவடிக்கைக்கு அஞ்சி இராமேஸ்வரம் துறைமுகத்தை நோக்கி வந்துள்ளனர்.
நடுக்கடலில் கடற்றொழிலாளர்கள் மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை தொடர்ந்து விரட்டியதால் மீன் பிடிக்க முடியாமல் படகு ஒன்றுக்கு சுமார் 70ஆயிரம் வரை நஷ்டத்துடன் கடற்றொழிலாளர்கள் கரை திரும்பியுள்ளனர்.
இதனிடையே எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் சுமார் 30க்கும் மேற்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீன்பிடி விசைப் படகுகள் நுழைந்து தடை செய்யப்பட்ட
வலைகளை பயன்படுத்தி இலங்கை கடல் வளத்தை அழித்ததாக ரோந்து பணியில் இருந்த
இலங்கை கடற்படையினர் படகு எண்ணுடன் வீடியோ எடுத்து ஜிபிஎஸ் ஆதாரத்துடன் எல்லை
தாண்டிய படகுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இராமேஸ்வரம் மீன் வளத்துறை
அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.