இலங்கை- இந்திய கடற்றொழிலாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் வெகுவிரைவில்..! இராமலிங்கம் சந்திரசேகர்
இலங்கை(Sri lanka), இந்திய கடற்றொழிலாளர்களுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் வெகுவிரைவில் நடைபெறவுள்ளது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar )தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரத்தின் அனைத்து விசைப்படகு சங்க செயலாளர் சகாயம் தலைமையிலான இந்திய கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் குழு நேற்றைய தினம் அமைச்சரை யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்பரப்பு
நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்பதை இந்திய கடற்றொழிலாளர்கள் உணர்ந்தனர் என்பதை அவர்களின் கருத்துக்கள் ஊடாக அறியமுடிந்தது.
கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்
எனவே, இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கும், இது தொடர்பில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.
இதற்கமைய அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் எதிர்வரும் நாட்களில் நடைபெறும் எனவும் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




