தீவிரமடைந்துள்ள கோவிட் பரவல் காரணமாக சிவப்பு வலயத்தில் இலங்கை
இலங்கையில் தீவிரமடைந்து வரும் கோவிட் தொற்று நிலைமை காரணமாக தொடர்ந்தும் இலங்கை சிவப்பு வலயத்திலேயே காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையிலிருந்து வெளியேறுவதற்கு நாளொன்றுக்குள் இனங்காணப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 950 வரை குறைய வேண்டும் எனவும் விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக்க தெரிவித்துள்ளார்.
கோவிட் பரவலில் இலங்கை சிவப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நாட்டின் தற்போதைய நிலைமையில் கோவிட் தொற்றாளர்கள் மற்றும் நாளொன்றுக்கு இனம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு இலங்கை சிவப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுவதற்கு இன்னும் ஒரு வாரகாலம் வரை செல்லும். அத்துடன் இந்த எச்சரிக்கையில் இருந்து மீண்டு, பச்சை வலயமாக பிரகடனப்படுத்தப்படுவதற்கு நாளொன்றுக்கு கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படும் எண்ணிக்கை 950 வரை குறைவடைய வேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டில் கோவிட் தொற்றாளர்கள் நாளொன்றுக்கு இனங்காணப்படும் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி இருந்தது. என்றாலும் தற்போது அந்த எண்ணிக்கை குறைவடைந்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
