எண்ணெய் வள நாடுகளுடன் உடன்படிக்கையை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை
டொலருக்கு எதிரான ரூபாவின் விரைவான தேய்மானம், அதன் காரணமாக நாட்டின் எண்ணெய் இறக்குமதியில் ஏற்படவுள்ள தாக்கம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு இலங்கை அரசாங்கம் எண்ணெய் வள நாடுகளுடன் அரசாங்கம் உடன்படிக்கையை செய்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதன் குவைத், ஓமான், ஐக்கிய அரபு ராச்சியம் மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளில் இருந்து நீண்ட கால அடிப்படையில் எரிபொருட்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இலங்கையின் எரிபொருள் விலை எதிர்காலத்தில் மேலும் உயரும் என்பதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில் இந்த நாடுகளின் தூதரகங்களுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நீண்ட கால கட்டண திட்டத்தின் கீழ் சிறப்பு ஒதுக்கீட்டு முறையைப் பயன்படுத்தி சலுகை விலையில் மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதே இந்த ஜீ டு ஜீ உடன்படிக்கையின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.