வெளிவிவகார அமைச்சின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி ரணில்
ஓய்வு பெறும் வயதில் உள்ள வெளிநாடுகளுக்கான நான்கு தூதுவர்கள் மற்றும் ஒரு உயர் ஸ்தானிகர் ஆகியோருக்கு, மூன்று வருட பதவிக் காலத்தை பூர்த்தி செய்வதற்கு அனுமதி வழங்குமாறு வெளிவிவகார அமைச்சு விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி அலுவலகம் நிராகரித்துள்ளது.
பொதுத்துறை ஊழியர்கள் 60 வயதிற்குள் ஓய்வு பெற வேண்டும் என்ற அரசாங்கக் கொள்கையை வைத்து எந்த நீடிப்புகளையும் வழங்குவதில்லை என்ற அடிப்படையிலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

வெளியுறவு அமைச்சின் மேலும் பல கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஓய்வுபெறும் வயதை மாற்றியமைத்த போதிலும், இலங்கை வெளிவிவகாரச் சேவையிலிருந்து நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்களின் விடயத்தில் மூன்று வருட பதவிக் காலத்தை பூர்த்தி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்கனவே வெளிவிவகார அமைச்சு எடுத்திருந்தது.
எனினும், தூதுவர்கள் பி.எம். ஹம்சா (ரியாத்), கிரேஸ் ஆசிர்வதம் (பிரசல்ஸ்), ஏ.
சபருல்லா கான் (ஓமன்) மற்றும் எஸ்.டி.கே சேமசிங்க (வோர்சா) மற்றும்
உயர்ஸ்தானிகர் ஏ.எம்.ஜே. சாதிக் (மாலத்தீவு) ஆகியோர் விடயத்திலேயே அமைச்சின்
கோரிக்கையை ஜனாதிபதி செயலகம் நிராகரித்துள்ளது.