முதல் வரலாற்று வெற்றியை தனதாக்கிய அநுர தரப்பு! மகிந்த தேசப்பிரிய
எனது காலத்தில், இவ்வாறானதொரு வரலாற்று வெற்றியை ஒரு கட்சி பெற்றுள்ளமை இதுவே முதன்முறையாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய(Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அநுர தரப்பின் பெரு வெற்றி
தேர்தலில் வெற்றிபெறுவோர் வெற்றியைக் கொண்டாடுவதானது தோல்வியடைந்த கட்சிகளின் காயத்தில் உப்பை கொட்டுவதைப் போன்றதாகும்.
அந்தவகையில் இம்முறை வெற்றியடைந்த கட்சி வெற்றியைக் கொண்டாடாமல் இருப்பது வரவேற்கக் கூடிய விடயமாகும்.
எனது காலத்தில் இவ்வாறானதொரு வரலாற்று வெற்றியை ஒரு கட்சி பெற்றுள்ளமை இதுவே முதன்முறையாகும்.
1970இல் நாடாளுமன்றத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கப்பட்டது. 1977இல் ஆறில் ஐந்து பெரும்பான்மை வழங்கப்பட்டது. அதன் பின்னர் எந்தவொரு தனி கட்சியாலும் இவ்வாறானதொரு வெற்றியை பெற முடியவில்லை.
அனுபவம் பெரிய விடயமல்ல..
எனினும் தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ள அதியுயர் அதிகாரத்தை துஸ்பிரயோகப்படுத்தும் என்று மக்கள் நம்பவில்லை. எனவே இந்த நாடளுமன்றம் முழு இலங்கையர்களினதும் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக செயற்பட வேண்டும்.
அரசாங்கத்துக்குள்ளும் நாடாளுமன்றத்திற்குள்ளும் பெரும்பான்மை நிலைப்பாடு என்பதற்கு அப்பால் ஜனநாயகக் கலந்துரையாடல்களின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.
பெரும்பாலானவர்கள் வாக்களிப்பை புறக்கணித்தமைக்கு அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளே பொறுப்புக் கூற வேண்டும். தோல்வியடைந்தாலும் மக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்பதை இது உணர்த்துகின்றது.
எனவே யாரும் யார் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கக் கூடாது. 1977இலும் பெரும்பான்மையாக புதுமுகங்களாகவே தெரிவு செய்யப்பட்டனர். எனவே அனுபவம் என்பது பெரிய விடயமல்ல என குறிப்பிட்டார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
