வரலாற்றில் யாரும் பெற்றுக் கொள்ளாத கடன் தொகை! ஒரு வாரத்தில் அநுர அரசாங்கத்தின் செயற்பாடு
அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) அதிகாரத்திற்கு வந்து ஒரு கிழமையில் இலங்கையில் வரலாற்றில் யாரும் பெற்றுக்கொள்ளாத கடன் தொகையை பெற்றுக்கொண்டுள்ளார் என்று கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க (Rosy Senanayake) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வழங்கிய வாக்குறுதிகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நம்பியே மக்கள் அலை ஒன்று ஏற்பட்டு அநுர குமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்.

ஆனால் அரசாங்கம் அமைந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வேலைத்திட்டங்களை பார்த்து மக்கள் அவர்களிடம் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் மீது மக்களுக்கு விரக்தி நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் கடன்தொகையான 41 பில்லியன் டொலரை செலுத்துவது பெரிய விடயம் அல்ல என அநுரகுமார திஸாநாயக்க அன்று தெரிவித்திருந்தார். அதேபோன்று பணம் அச்சிட்டும் கடன் பெற்றும் நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கம் ஒன்று எதற்கு என அவர் கேட்டிருந்தார்.
எரிபொருள் இறக்குமதியில் அமைச்சருக்கும் தரகுப்பணம் செல்வதாகவும் அந்த பணத்தை இல்லாமல் செய்து, எரிபொருள் விலையை குறைப்பதாகவும் தெரிவித்தார். அரச சொத்துக்களை திருடியவர்களை 24 மணி நேரத்துக்குள் சிறையில் அடைப்பதாக தெரிவித்தார்.
இவ்வாறு பல்வேறு வாக்குறுதிகளை அவர் வழங்கி இருந்தார். ஆனால் இந்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றி இருக்கிறாரா?

கடன் பெறுவதில்லை என தெரிவித்த இவர்கள், வரலாற்றில் யாரும் பெறாத கடன் தொகையை அரசாங்கம் அமைத்து ஒரு வாரத்துக்குள் பெற்றுள்ளார்கள். பணம் அச்சிட்டுள்ளனர்.
அரசாங்கத்தை பெற்றுக்கொண்டாலும் இவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எந்த திட்டமும் இவர்களிடம் இல்லை. அதேபோன்று நாட்டை அபிவிருத்தி செய்யவும் இவர்களிடம் வேலைத்திட்டம் இல்லை.
அவ்வாறு இருந்தால் அதனை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். மேலும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அப்படியானால் அந்த வேலைத்திட்டங்களையும் அதனை எப்போது ஆரம்பிப்பது என்ற திட்டத்தையும் நாட்டுக்கு சொல்ல வேண்டும்.
எந்த வேலைத்திட்டமும் இவர்களிடம் இல்லை. நாட்டை அபிவிருத்தி செய்ய எந்த திட்டமிடலும் இல்லாமலேயே இவர்கள் தேர்தலுக்கு முகம்கொடுத்துள்ளனர். அதனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகிய மூன்றுபேறும் இருளில் அலைந்துகொண்டு, ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தையே முன்னெடுத்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri