வடமாகாண ஆளுநருடன் கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் முக்கிய சந்திப்பு
வடமாகாண கடற்றொழிலாளர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் இணைய வாயிலாக கலந்துரையாடியுள்ளனர்.
இக் கலந்துரையாடல் நேற்றுமுன் தினம் (15.10.2022) நடைபெற்றுள்ளது.
வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர் சங்கங்களின் பத்துக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு தமது பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா கூறுகையில்,
சட்டவிரோத சுருக்கு வலைத்தொழில்
“சட்டவிரோத சுருக்கு வலைத்தொழிலைக் கட்டுப்படுத்துவதற்கு சட்ட ஏற்பாடுகள் இருந்தும் கடற்படை அதனை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய கடற்றொழிலாளர் மக்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் பொருட்டு கடற் படைக்கு அழுத்தம் கொடுக்குமாறு” ஆளுநரிடம் இதன்போது கோரிக்கை முன்வைத்துள்ளார்.
மேலும், யாழ். பருத்தித்துறையில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத கடலட்டை பண்ணைக்கு ஆதரவாக அதிகாரிகள் செயற்படுவதாக தெரிவித்ததுடன் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகளைப் பணிக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மண்ணெண்ணை
முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சார்பில் கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் அருள்நாதன் கருத்துத் தெரிவிக்கையில்,
“எமது கடற்றொழிலுக்கு தேவையான மண்ணெண்ணையை தொடர்ச்சியாக பெற்றுகொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் தடையின்றி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.
முல்லைத்தீவில் இடம்பெறுகின்ற சட்டவிரோத சுருக்கு வலைதொழிலை கட்டுப்படுத்துவதற்கு கடற்படைக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அழுத்தம் வழங்குமாறு” தெரிவித்துள்ளார்.
தடையின்றி மின்சாரம்
மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சார்பில் அதன் தலைவர் ஆலம் பங்கு பற்றியதுடன் தமது பிரதேசத்தில் அமைக்கப்படும் காற்றாலையால் தமது பிரதேச மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஆளுநரைக் கோரினர்.
மேலும் தமது பகுதியில் அகழப்படும் கனிய மணல் தொடர்பில் தாம் பல போராட்டங்களை மேற்கொண்ட போதிலும் தொடர்ச்சியாக அதன் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டியதுடன் அதனை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரினர்.
ஆளுநர் கருத்து
இவ்வாறு பல விடயங்கள் தொடர்பில் வடக்கு ஆளுநருக்கு சுட்டிக்காட்டிய கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளிடம் ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்
குறித்த விடயங்கள் தொடர்பில் துறை சார்ந்த அதிகாரிகளையும் கடற்றொழிலாளர் பிரதிநிதிகளையும் அழைத்து பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி முடிவு ஒன்றை எட்டுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சுருக்கு வலை தொடர்பில் சட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விடயங்களை மீறி தொழில் செய்ய முடியாது என கூறியதுடன் கடற்றொழிலாளர் சங்கங்கள் எழுத்து மூலம் தந்தால் நீதிமன்ற நடவடிக்கைக்கு தான் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



