அறிவுரையை கேட்காத விடுதலைப் புலிகளின் தலைவர்! உயிரிழப்புக்கு டக்ளஸ் கூறும் காரணங்கள்..
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், யுத்தக் காலத்தில் தன்னுடைய அறிவுரைகளைக் கேட்டிருந்தால் இன்று உயிரோடு இருந்திருப்பார் என்று முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
யார் மீது தவறு..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எமது நாட்டில் நடந்த யுத்தம் எம்மை மிக பின்தங்கியவர்களாக மாற்றியுள்ளது.
பல நாடுகள் சேர்ந்து ஒரு நாட்டின் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றோம். இது யாருடைய தவறு. ஆயுதத்தைக் கையிலெடுத்தவர்கள் மீதுதான் அந்த தவறு உள்ளது.

அன்று நான் கூறிய விடயங்களை விடுதலைப் புலிகள் அமைப்போ, அதன் தலைவர் பிரபாகரனோ கேட்டிருந்தால் இன்று இவ்வளவு பெரிய அழிவு நிச்சயமாக ஏற்பட்டிருக்காது.
எங்களுடைய சமூகம் இன்னும் பல முன்னேற்றகரமான சூழலில் வாழ்ந்து கொண்டிருப்போம் என்பதுதான் என்னுடைய கருத்து. எனக்கு யாரையும் திட்ட வேண்டும், விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இது என்னுடைய ஆதங்கம். சமூகத்தின் மீதுள்ள கவலை இது. இதுதான் யதார்த்தம்.
புலிகள் அமைப்பில் இருந்து உயிரை நீத்தார்கள் என்றால் அவர்களொன்றும் வானத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. அவர்களும் என்னுடைய சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் தான். அவர்களுடைய இழப்பு, இந்த அழிவு எங்களை பாதிக்கும். நாங்கள் தான் இவற்றை சரியாக கையாள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.