தமிழ் மக்கள் தொடர்பில் அரசிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் மக்கள் இறந்து போன தங்கள் உறவுகளை தங்களோடு வாழ்ந்த மக்களை தங்களுடன் சேர்ந்து இருந்த உறவுகளை கண்ணீர் சிந்தி நினைவுகூறும் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நினைவு கூர ஆட்சியில் உள்ள அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
ஆனால் இந்த அரசாங்கம் இத்தைகை ய நிகழ்வுகளை செய்யவிடாது தடுப்பதற்கு முயன்று வருகிறது. அவ்வாறு செய்வது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற மிகப் பெரிய அநியாயமான செயல்களில் ஒன்றாகும் .
எங்களைப் பொறுத்தவரையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு வணக்கம் செலுத்துவதற்கு கோரிக்கை விடுக்கின்ற மதத் தலைவர்கள் சரி அல்லது இந்தத் தாக்குதலுக்காக விடுமுறை வழங்கி பாராளுமன்றம் வரைக்கும் அஞ்சலி செலுத்துகின்ற இந்த நாட்டின் தலைவர்கள் ஒரு நியாயமான நீதியாக ஜனநாயகத்தை நேசிக்கும் தேவர்களாக இருந்தால் உண்மையை கண்டறிந்து நீதியை நிலைநாட்ட வேண்டும்.
பகிரங்கமாக தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கு மன்னிப்பு கேட்டு உயிரிழந்தோரினை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்த அனுமதி வழங்குவதன் மூலமே அவர்கள் தங்களை மனிதர்களாக இந்த பூமிப்பந்தில் அடையாளப்படுத்த முடியும்.
ஆகவே இது ஒரு முக்கியமான தமிழர்களுடைய வரலாற்றில் எல்லோராலும் பார்க்கப்படுகின்ற எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயம். உலகத்திலே இருபதாம் நூற்றாண்டில் 21 ஆம் நூற்றாண்டு காலகட்டங்களில் மனிதகுலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய பேரழிவு பெரிய அனர்த்தம் அதன் நினைவு கூரலை தடுப்பது பௌத்த மதத்தை நேசிக்கின்ற புத்த பெருமானை வணங்குகின்றவர்கள் செய்யும் ஒரு காரியமல்ல.
ஆகவே அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு நினைவு கூர எவ்வாறு அனுமதி வழங்கினார்கள் அதேபோல கடந்த காலங்களில் 2016 ல் இருந்து தமிழர்கள் இந்த வணக்கத்தை முள்ளிவாய்க்காலில் சென்று உணர்வுபூர்வமாக மேற்கொண்டார்கள் அந்த வகையில் தொடர்ந்தும் மே 18 நிகழ்வை செய்ய அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும். என்றார்.