உயிர்த்த ஞாயிறு இரண்டாம் ஆண்டு நினைவை முன்னிட்டு வவுனியா இந்து ஆலயங்களிலும் விசேட வழிபாடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மரணித்தவர்களின் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி நாட்டின் பல பகுதிகளிலும் விசேட பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள், விருந்தினர் விடுதிகள் என்பவற்றில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டிருந்தனர்.
அத்தாக்குதல் நடைபெற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனை வவுனியாவில் உள்ள இந்து ஆலயங்களிலும் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில் இன்று காலை 8.45 மணிக்கு மரணித்தவர்கள் நினைவாகவும், ஆத்ம சாந்தி வேண்டியும் வவுனியா, குட்செட் வீதி, கருமாரி அம்மன் ஆலயத்தில் ஆலய குரு பிரபாகர குருக்கள் தலைமையில் விசேட பிரார்த்தனை நடத்தப்பட்டுள்ளது.
இதில் சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு விசேட வழிபாட்டில் ஈடுபட்டதுடன் தீபம் ஏற்றி அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.
இதேவேளை, தாக்குதலில் பலியான மக்களை நினைவுகூர்ந்து, இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும் வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
அந்தவகையில் வவுனியாவின் பிரதான தேவாலயமான இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் அருட்தந்தை ஜெயபாலன் அடிகளார் தலைமையில் மெழுகுவர்த்தி ஏற்றி விஷேட வழிபாடு இன்று அதிகாலை இடம்பெற்றிருந்தது.