வன்முறை, தீவிரவாதத்தினை தடுக்கும் விசேட செயலமர்வு (Photos)
மன்னாரில், வன்முறை, தீவிரவாதத்தை தடுப்பதற்கான சமூக குழுக்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான விசேட செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த செயலமர்வு, தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் அதன் மன்னார் மாவட்ட தொடர்பாடலுக்கான மையத்தின் இணைப்பாளர் ஜோன்சன் (Johnson) தலைமையில் இன்று மன்னாரில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில், இலங்கை கெல்விட்டாஸ்க் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையில் மாவட்ட ரீதியில் உள்ள மத தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோரை உள்ளடக்கி செயலமர்வு இடம்பெற்றது.
பிரதேச ரீதியாக ஏற்படும் பிரிவினைகள், வன்முறை, தீவிரவாத செயற்பாடுகளை நோக்கி நகர்வதை தடுக்கும் நோக்கிலும், பிரதேச மற்றும் மாவட்ட ரீதியில் இயங்கி வரும் சர்வ மத குழுக்களின் தீவிரவாதத்திற்கு எதிரான செயல் திறன்களை மேம்படுத்தும் விதமாக குறித்த செயலமர்வு ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றுள்ளது.
குறித்த செயற்றிட்டமானது ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இலங்கையில் இன ரீதியான முரண்பாடுகள் அதிகம் காணப்படும் ஆறு மாவட்டங்கள் உள்வாங்கப்பட்டு அப் பகுதிகளில் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


