பிள்ளையானுடனான சந்திப்பு குறித்து நாளை விசேட ஊடக சந்திப்பு நடத்தும் கம்மன்பில
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான சிவனேசத்துரை சந்திரக்காந்தன் எனப்படும் பிள்ளையானை சிறையில் சந்தித்தமை தொடர்பில் நாளை ஊடக சந்திப்பு நடத்த உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பிள்ளையானை, கம்மன்பில சந்தித்துள்ளார்.
பிள்ளையான் தொடர்பில் சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் பிழையான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் 10ம் சரத்தின் 1ம் பிரிவின் அடிப்படையில் எந்தவொரு கைதியையும் சட்டத்தரணிகள் சந்திக்க சந்தர்ப்பம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையானின் சட்டத்தரணி கடந்த 9ம் திகதி பிள்ளையானை பார்வையிட சென்ற போது அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அதன் பின்னர் தாம் குற்ற விசாரணைப் பிரிவிற்கு சட்டத்தரணி என்ற அடிப்படையில் கடிதம் எழுதி அனுமதி பெற்றுக்கொண்டு பிள்ளையானை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்த விபரங்கள் நாளைய தினம் ஊடக சந்திப்பில் வெளிப்படுத்தப்படும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.