எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஜப்பான் தூதுவர் இடையில் விசேட சந்திப்பு
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாமாவுக்கும் (Akira Sugiyama), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் (Sajith Premadasa) இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று நடந்துள்ளது.
இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
கோவிட் ஒழிப்பு திட்டம் மாத்திரமல்லாது பல அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசு வழங்கி வரும் உதவிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்து கொண்டுள்ளார்.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பல தசாப்த இருதரப்பு உறவுகள் குறித்து தூதுவர் இதன்போது நினைவூட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி பசுமை கட்சி எனவும், அதன் ஊடாக பசுமை திட்டங்கள், பசுமை சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டம் மற்றும் Project Leopard ஆகிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
இதற்கு தேவையான அனுசரணைகளை வழங்குமாறும் அவர் ஜப்பான் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து விசேட கவனத்தைச் செலுத்துவதாகக் கூறியுள்ள ஜப்பான் தூதுவர், அதற்கான அனுசரணையை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

