ஹரி ஆனந்தசங்கரி ஏற்பாட்டில் கனேடிய நாடாளுமன்றத்தில் சுமந்திரன் - சாணக்கியன் விசேட சந்திப்பு
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி உடன் விசேட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rajaputhiran Rasamanickam) தெரிவித்துள்ளார்.
அவர் இதனை தனது உத்தியோக பூர்வ முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில்,
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி அவர்களின் மகன்) உள்ளிட்ட நாடாளுமன்ற குழுவினரை, நானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனும் (M.A.Sumanthiran) சந்தித்துக் கலந்துரையாடினோம்.
இதன்போது வடக்கில், கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்துப் பேசப்பட்டுள்ளன.
குறிப்பாகத் தொல்பொருள் திணைக்களம், வன இலாகா திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் அத்துமீறல்கள் மற்றும் படையினரின் தேவைக்காகப் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.