கிழக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்
கிழக்கு மாகாணத்தில் 568 பாடசாலைகள் மீண்டும் திறப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் என்.பிள்ளைநாயகம் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில் நடைமுறையிலுள்ள கோவிட் சூழ்நிலையில் பாடசாலைகளைச் சுகாதார வழிமுறைகளுக்கமைவாக ஆரம்பிப்பதற்கேற்ற பிரத்தியேகமான செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன.
நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகளைப் பாதுகாப்பான முறையில் ஆரம்பிப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றுநிருபத்தின் அடிப்படையில் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக ஆரம்பிப்பது தொடர்பாக தொற்று நோயியல் நிபுணர் தர்சினி கருத்துத் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் பாவித்த முக கவசங்களைக் கண்டிப்பாகப் பாதுகாப்பான முறையில் அகற்றுவது, சமூக இடைவெளி பேணுவது, கைகளைக் கழுவிக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாடசாலை வகுப்பறை சுத்தம் செய்தல், வகுப்பறைகளில் காற்றோட்டத்தினை உறுதிப்படுத்தல், மாணவர்களின் உடல் வெப்பநிலையினை பரிசோதித்தல், ஓய்வறைகளில் அதிகமானவர்கள் இருப்பதைத் தவிர்ப்பது, மாணவர்களுக்கான நோயாளர் அறை ஒன்றையும் ஆயத்தம் செய்வது போன்ற சுகாதார விதிகள் தொடர்பாக எடுத்துரைத்தார்.
பின்னர் மாகாணக் கல்விப் பணிப்பாளர் என்.பிள்ளைநாயகம் குறிப்பிடுகையில், பாடசாலை வகுப்பறைகளை கவர்ச்சியாக்குவது, வெளிச்சூழலை சுத்தப்படுத்துவது மற்றும் 200 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஆரம்பித்தல், பாட விதானங்களை உடனடியாக ஆரம்பிக்காது மெதுவாக ஒருநாளைக்கு மூன்று பாடங்கள் என்ற அடிப்படையிலும், மாணவர்களை விளையாட்டு மற்றும் சித்திரம் கட்டுரை கவிதைகள் போன்ற இதர செயல்பாடுகளில் கூடியளவு நேரத்தினை செலவிடவைப்பது, அவற்றில் மாணவர்களின் ஈடுபாடுகளை அதிகரிப்பது போன்றன தொடர்பில் எடுத்துக் கூறினார்.
அத்துடன், உளவியல் சார் பாடவிதானம் ஒன்றும் நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது மாணவர்களுக்கு விரைவில் அறிமுகமாகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மாணவர்களை தங்களின் வீடுகளிலிருந்து தங்களுக்கான நீர் உணவுகளைக் கொண்டு வரும்படியும் இலவச உணவுகள் தற்போது வழங்கப்படமாட்டாது எனவும் யுனிசெப் நிறுவத்தின் உதவிமூலம் பையில் அடைக்கப்பட்ட பால் உணவு வழங்கப்படவுள்ளதாகவும், மேற்சொன்ன அறிவுறுத்தல்களைப் பாடசாலைகளில் உடனடியாக காட்சிப்படுத்தும் படியும், பெற்றோர்களுக்கான விழிப்புணர்களையும் வழங்குமாறு குறிப்பிடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் வலையக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் உள்ளுராட்சி
மன்றங்களின் தலைவர்கள், சுகாதார பிரிவினர்கள் உட்படப் பலரும்
கலந்து கொண்டிருந்தனர்.