அரசியல் கைதிகளின் பிரச்சினையை தீர்க்க மக்கள் விரும்பவில்லையோ என்ற சந்தேகம் எழுகின்றது - டக்ளஸ் தேவானந்தா
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் எமது கையை பலப்படுத்தினால் அரசியல் கைதிகளின் விடுதலை உடனடியாக இடம்பெறும் என்றேன் அது விருப்பமில்லாமலே மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பலர் உங்களிடம் நேரடியாகவே வருகைதந்து கோரிக்கை விடுத்துள்ளனர், இந்த விடயத்தில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என ஊடகவியலாளரொருவர் வினவியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
அரசாங்கத்துக்கு மாத்திரமல்ல பலருக்குப் பலவிதமான அபிப்பிராயங்கள் இருக்கிறது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் நான் மக்களிடம் கேட்டிருந்தேன்.
அரசியல் கைதிகள் தொடர்பாக எனக்குக் கூடிய வாக்குகளையும், கூடின ஆசனங்களையும் தருமாறு கேட்டிருந்தேன். அப்படித் தந்திருந்தால் இந்த பிரச்சினையை உடனடியாக தீர்ப்பேன் என்றும் சொல்லியிருந்தேன்.ஆனால் மக்கள் அந்த பிரச்சினையைத் தீர்க்க விரும்பவில்லையோ என்ற சந்தேகம் கூட எழுகின்றது என தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தல், வெளி மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸார், மீன்பிடி அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.