வவுனியா விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல் (Photos)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக வவுனியா மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தலமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(13) இடம்பெற்றுள்ளது.
விவசாயிகளின் பிரச்சினை
இந்த கலந்துரையாடலில், விவசாயிகளின் வயல் நிலங்கள் மற்றும் மேட்டு நிலப் பயிற்செய்கைக்குரிய நிலங்கள் வன இலாகாவால் எல்லையிடப்பட்டுள்ளமை, தோட்டச் செய்கைக்கு நீர் இறைக்கும் இயந்திரத்திற்கான மண்ணெண்ணெய் கிடைக்காமை, விவசாயிகளின் அறுவடை மற்றும் கால போக நெற்செய்கைக்கான டீசல் பங்கீடு மற்றும் சிறுபோக நெல்லுக்கு உத்தரவாத விலை கிடைக்காமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
தீர்மானங்கள்
விவசாயிகளின் மேட்டு நிலப் பயிர்ச்செய்கை மற்றும் கால போக நெற் செய்கை என்பவற்றுக்கான எரிபொருள் சரியான முறையில் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் விவசாயிகள் எரிபொருளை கையிருப்பில் வைத்திருக்கும் போது விவசாய தேவை என்பதை முறையாக உறுதிப்படுத்தி கடிதம் ஒன்றை வைத்திருத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிறுபோக நெற்கை இடம்பெற்று வருகின்ற நிலையில் விவசாயிகளிடம் இருந்து அரிசி ஆலை உரிமையாளர்களால் அரசாங்க உத்தரவாத விலையை விட குறைந்த விலையில் நெல் கொள்வனவு செய்யப்படுவதனால் அதிக விலைக்கு உரம், கிளைநாசினி என்பவற்றை பெற்று விவசாயம் செய்த விவசாயிகள் நட்டம் அடைவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கோரிக்கை விடுப்பு
இதற்கான உடனடியாக தீர்வை முன்வைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி தீர்வைப் பெற்றுத் தருவதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் இணைப்பாளர் டினேஸ் மற்றும் மாவட்ட விவசாய அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் ப.சிறி உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.