முல்லைத்தீவில் காணி பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் (Video)
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று (16.08.2023) காலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களம், மகாவலி அதிகார சபை, வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களினால் தமிழ் மக்களுடைய வாழ்வாதாரம் உள்ளிட்ட பூர்வீக காணிகள் பறிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் அதற்கான தீர்வுகளை எட்டும் முகமாகவும் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடல்
குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலகத்தினுடைய பிரதிநிதி இளங்கோவன் , நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்களான கு.திலீபன், சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் குணபாலன் (காணி), வனவளத்திணைக்களம், மகாவலி அதிகார சபை உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களது தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.












