சட்டவிரோத மணல் மற்றும் கிரவல் அகழ்வு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் மற்றும் கிரவல் அகழ்வுகளைத் தடுத்தல், அதேபோன்று சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற மணல் மற்றும் கிரவல் அகழ்வுகளை முறையான பொறிமுறை ஒன்றின் மூலம் விநியோகித்தல் போன்ற செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சம்பந்தப்பட்ட திணைக்கள தலைவர்களுடனான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் இன்று (27) இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரதேச செயலாளர் தனபாலசிங்கம் அகிலன், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் பொறுப்புடைய தலைவர்கள் கலந்துகொண்டதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தானின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வழமையாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தானின் நிகழ்வுகள் அனைத்துக்கும் முல்லைத்தீவின் அனைத்து ஊடகங்களுக்கும் அழைப்பு விடுகின்ற நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப்பிரிவு பாரிய பிரச்சினையாகக் காணப்படும் மணல் கிரவல் அகழ்வு தொடர்பான விடயம் தொடர்பில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்படாமை குறித்து முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டத்தில் கடுமையான பிரச்சினையாகக் காணப்படும் குறித்த விடயம் தொடர்பில் தகவல்கள் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இவ்வாறு இடம்பெற்றமை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.
குறிப்பாக மாவட்டத்தில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கள், இயற்கை வள அழிப்புக்கள் தொடர்பில் ஊடகங்கள் வெளிப்படுத்தி வரும் நிலையில் இந்த விடயங்கள் தொடர்பாக இடம்பெறும் இவ்வாறான கலந்துரையாடல்கள் காணி பயன்பாட்டுக்குழுக் கூட்டங்களில் ஊடகங்கள் புறக்கணிக்கப்படுவது வெளிப்படைத்தன்மையாக நடைபெறாமையையே சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.