தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இந்திய கல்விசார் ஆய்வு மன்றத்துடன் உடன்படிக்கை கைச்சாத்து (Photos)
அண்மைக்காலமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உயர் கல்வியினை சர்வதேசமயப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
பல்கலைக்கழக உபவேந்தர் பேராசியர் ஏ. றமீஸ் தலைமையில் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. றியாட் ரூளி இதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டுவருகின்றார்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகம், கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த அமைப்புக்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு, அவற்றினை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.
உடன்படிக்கை கைச்சாத்து
இந்திய கல்விசார் ஆய்வு மன்றத்துடனான சந்திப்பும், உடன்படிக்கையும் நேற்று (27.09.2022) இணையவழி ஊடாக இடம்பெற்றுள்ளது.
இவ்வுடன்படிக்கைக்கான ஆரம்பகட்ட முன்னெடுப்புக்களை தென்கிழக்குப் பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் முகாமைத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.பீ.எம். இஸ்மாயில் மேற்கொண்டிருந்தார்.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர், பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர், இந்திய கல்விசார் ஆய்வு மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்திய கல்விசார் ஆய்வு மன்றமானது இந்தியாவிலுள்ள பெரும்பாலான அரச பல்கலைக்கழக கல்வியலாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு அமைப்பாகும்.
கல்வி வேலைத் திட்டங்கள்
இவ்வமைப்புடனான புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் கற்றல், கற்பித்தல், ஆய்வு மற்றும் புத்தாக்கத் துறைகளில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் பயனடைவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது ஆசிரிய, மாணவ பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்கள், ஆய்வு மாநாடுகள், ஆய்வு வெளியீடுகள், சான்றிதழ் மற்றும் டிப்ளோமாக பாடநெறிகள், ஆசியர் மற்றும் மாணவர் பயிற்சிகள் உள்ளிட்ட பல ஒன்றினைந்த வேலைத் திட்டங்களை துரிதகதியில் நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற புரிந்துணர்வு உடன்படிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகம் நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகின்றது.
மேலும், ரஷ்யா, துருக்கி, மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பல புரிந்துணர்வு உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.