ஓட்டமாவடி சூடுபத்தினசேனையில் இதுவரை 2850 கோவிட் உடல்கள் அடக்கம்
மட்டக்களப்பு - ஓட்டமாவடி, சூடுபத்தினசேனையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மற்றும் உடல்கள் இதுவரையில் 2850 அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டுமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் இன்று தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மற்றும் உடல்களை அடக்கம் செய்ய அடையாளப்படுத்தப்பட்ட ஒரே ஒரு இடம் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பகுதியான மஜீமா நகர் சூடுபத்தினசேனை இந்த பொது மயானத்திலே இந்த உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
இதனை எமது சபை பொறுப்பேற்று மனிதவலு, இயந்திரவலு என்பவற்றைப் பயன்படுத்தி மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்கு இராணுவத்தினர், சுகாதார பணியாளர்கள்; ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த உடல்களை அடக்கம் செய்வதற்கு 5 ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி அதில் அனைத்து சமூகங்களுடைய உடல்கள் அடக்கம் செய்து வருகின்றோம்.
இதுவரையில் 2850 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது கிழக்கு மாகாணத்திலிருந்து நாளாந்தம் அதிகமான ஜனாஸாக்கள் உடல்கள் வருகின்றதென அவர் தெரிவித்துள்ளார்.