ஓட்டுமாவடியில் கோவிட் தொற்றினால் உயிரிழந்த 1437 பேர் இதுவரை அடக்கம் - ஏ.எம் நௌவ்பர்
மட்டக்களப்பு ஓட்டுமாவடி சூடுபத்தினசேனையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மற்றும் உடல்கள் நேற்று(08) வரை 1437 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை நாளாந்தம் 25க்கு மேற்பட்ட உடல்கள் வந்த வண்ணமுள்ளதால் இனிவரும் நாட்களில் உடல்கள் அடக்கம் செய்ய இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என ஓட்டுமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் கவலை தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மற்றும் உடல்களை அடக்கம் செய்ய அடையாளப்படுத்தப்பட்ட ஒரே ஒரு இடம் ஓட்டுமாவடி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பகுதியான மஜீமா நகர் சூடுபத்தினசேனை பிரதேசமாகும்.
இந்த பொது மயானத்திலே இந்த உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுவருகின்றன. இதனை எமது சபை பொறுப்பேற்று மனித வலு, இயந்திர வலு என்பவற்றைப் பயன்படுத்தி மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
இதற்கு இராணுவத்தினர், சுகாதார பணியாளர்கள் ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றனர்.
இந்த நிலையில் இந்த உடல்களை அடக்கம் செய்வதற்கு 3 ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி அதில் உடல்கள் அடக்கம் செய்துவந்த நிலையில் இந்த காணி போதாது என அதனுடன் இணைந்த மேலும் இரண்டு ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி 5 ஏக்கர் காணியில், 40 இந்துக்கள் , 28 கிறிஸ்தவர்கள், 21 பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 1437 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதில் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் அடையாள கற்கள் நாட்டப்பட்டு இலக்கங்கள் இடப்பட்டு அந்த இலக்கங்களின் உடல்கள் யாருடையது என்ற பெயர் விபரங்கள் தயாரிக்கப்பட்டு பிரதேச சபையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த 5 ஏக்கர் காணியிலே இன்னும் சுமார் 500 உடல்கள் மட்டுமே அடக்கம் செய்யமுடியும். இருந்தபோதும் தற்போது கோவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாளாந்தம் 25 அல்லது 30 உடல்கள் நாடளாவிய ரீதியிலிருந்து வருகின்றதன் காரணமாக இன்னும் ஒரு சில நாட்களில் இந்த இடம் முடிந்துவிடும்.
எனவே மாற்று இடத்துக்கு எங்கு செல்வது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக ஒரு இடத்தை தெரிவு செய்ய வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.





