சஜித்தின் நிபந்தனைகளில் தளர்வு! தாமதமான தீர்மானம் என்று கூறும் கொழும்பின் அரசியல் தரப்பு!
இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நிபந்தனைகளில் ஜனாதிபதியை பதவி விலகக்கோரும் நிபந்தனையில் சிறிய தளர்வைக் காணக்கூடியதாக உள்ளது.
முன்னதாக பொதுமக்களின் கோரிக்கையான ஜனாதிபதி கோட்டாபய உடனடியாக பதவி விலகவேண்;டும் என்ற கோரிக்கையிலேயே இந்த தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் ஜனாதிபதி உடனடியாக பதவி விலகவேண்டும் என்று குறிப்பிட்டு வந்த ஐக்கிய மக்கள் சக்தி, தற்போது, குறிப்பிட்;;ட காலப்பகுதிக்குள் அந்த பதவி விலகல் மேற்கொள்ளப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தில் ஜனாதிபதி எந்த வகையிலும் தலையிடக் கூடாது என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த தளர்வு தற்போதைக்கு காலதாமதமான தீர்மானம் என்று கொழும்பின் அரசியல் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் வகையிலான முனைப்புக்களை ஜனாதிபதி தரப்பு எடுத்துள்ளதை அந்த தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக பதவியேற்றால் அது, ராஜபக்சர்களுக்கு பாதுகாப்பான இடைக்கால அரசாங்கமாக இருக்கும் என்றும் கொழும்பின் அரசியல் தரப்புக்கள் கூறுகின்றன.
எனினும் இலங்கையின் அரசியல் களம் மற்றும் பிரதமர் பதவி இன்னும் தீர்மானம் இல்லாமலேயே உள்ளது.