கடற்றொழில் அமைச்சர் இலங்கை மீனவர்கள் பாதிக்கும் விடயங்களை முன்னெடுக்கமாட்டார்! சித்தார்த்தன் எம்.பி
கடற்றொழில் அமைச்சர் அந்த துறையில் மக்களில் மிகவும் அக்கறையானவர். அதனால் இலங்கை மீனவர்கள் பாதிக்கும் விடயங்களை முன்னெடுக்கமாட்டார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர் ஒருவர், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப் போவதாக கடற்றொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிச்சயமாக அது எங்களுடைய மீனவர்களைப் பாதிக்கும். அவர்களிடம் ஒரு கட்டணம் அறவிட்டு அந்த கட்டணத்தை எங்களுடைய மீனவர்களுக்குக் கொடுக்க முடியும் எனச் சொல்லியிருக்கிறார்.
அதனை ஒரு சிந்தனையாகத் தான் சொல்லியிருக்கின்றார். அதை ஒரு திட்டமாகச் சொல்லவில்லை என தொலைக்காட்சி ஒன்றில் சொல்லியிருக்கின்றார். அவர் தனது சிந்தனையைச் சொல்லியுள்ளார். மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு வருகின்றது.
அவர் இந்த துறையில் மக்களில் மிகவும் அக்கறையானவர். அவர் இரண்டாவது முறை அதனைச் சிந்திப்பார் என நம்புகின்றேன். அதனால் அதனை நடைமுறைப்படுத்துவார் என நான் நம்பவில்லை.
இந்தியாவில் உள்ள மீனவர்கள் என்று சொல்லுகின்ற போது முதலாளிமார் அதிக பணத்தைக் கொடுத்து மீன்பிடிப்பார்கள். ஏழை கடற்றொழிலாளர்கள் நன்மையடைவார்கள் என்று நம்பவில்லை.
அரசியல்வாதிகள் பலரும் அந்த துறையில் இருக்கிறார்கள். அதனால் இதனை இரண்டாவது முறை சிந்திப்பார் என நம்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் தொப்புள் கொடி உறவு எனக் கூறுகின்ற போதும் இலங்கை மீனவர்கள் பாதிக்கும் வகையில் இந்திய மீனவர்கள் ஈடுபடுகிறார்கள் இதனை எப்படி பார்க்கிறீர்கள் என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோது,
தொப்புள் கொடி உறவு, தமிழ் உறவு என்பதற்கு அப்பாற்பட்ட விடயம் வாழ்வாதார பிரச்சினை. மீன்பிடிக்கும் கூடுதலானவர்கள் பெரிய முதலாளியின் கீழ் தொழிலாளியாக வேலை செய்பவர்கள்.
அது தான் அவர்களது வாழ்வாதாரம். யாராக இருந்தாலும் தமது வாழ்வைப் பார்க்கத் தான் முயற்சிப்பார்கள். அதன் விளைவு தான் இது. இதைப் பேசித் தீர்த்து அதனைக் கட்டுப்படுத்த வேண்டும்.
பல காலமாக அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. 1983 ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பித்த பின்னர் தான் இந்த நிலை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு அது பழக்கப்பட்டு விட்டது.
அதனை அரசாங்கத்திற்குச் சொல்லியிருக்கின்றோம். அரசியல்வாதிகள் பலர் ரோலர் உரிமையாளர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் அங்கு அழுத்தங்கள் இருக்கலாம். ஆனாலும், அவர்கள் அதனைத் தடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தமிழ் பேசும் சமூகம் மீது இந்த அரசாங்கம் அழுத்தத்தைப் பிரயோகிப்பதாக நீங்கள் எண்ணுகிறீர்களா? அது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த நடவடிக்கை என்ன என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது,
இது தொடர்பில் நாங்கள் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். புதிதாக ஒன்றும் எடுக்கப்போவதில்லை. தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீது கொடுக்கப்படுகின்ற அழுத்தங்கள் என்பவர்க்கு நாங்கள் குரல் கொடுப்பது மாத்திரமல்ல, வேறு விதமான நடவடிக்கைகளையும் சாத்வீக ரீதியில் எடுத்து வருகின்றோம். தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.
இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை இன்னும் கூடுதலான அழுத்தங்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் தான் இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரைத் தமிழ் மக்களை ஒடுக்குவது என்பது சிங்கள வாக்குகளைக் கூட்டும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
அதன் அடிப்படையில் தான் அவர்கள் வென்றார்கள். தற்போதைய ஜனாதிபதியும் அப்படி தான் வந்தார். தொடர்ந்தும் இப்படியான செயற்பாடுகளால் தான் இன்னும் பலமாக இருக்க முடியும் என நம்புகிறார். பெரும்பான்மையான சிங்கள மக்கள் அப்படியான மனநிலையில் இல்லை.
இருந்தாலும் அரசியல்வாதிகள் அதைத் தூண்டிக் கொண்டிருக்கும் போது அதைக் கடைப் பிடித்து அவர்களுக்கு வாக்களிப்பார்கள். கடந்த காலங்களில் சிங்கள பெரும்போக்கானோர்களாக இருந்த பலர் அரசியலில் படுதோல்வி அடைத்திருந்தார்கள்.
அதை அவர்கள் பின்னர் கண்டுள்ளார்கள். பண்டா செல்வா செல்வா ஒப்பந்தத்தை எதிர்ந்த ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்கள் 60 ஆம் ஆண்டு படுதோல்வி அடைந்துள்ளார்.
சிங்கள மக்கள் வெறுமனே இனவாதத்தைப் பார்ப்பவர்கள் அல்ல. அவர்கள் பொருளாதாரத்தையும் பார்ப்பவர்கள்.இதனால் அவர்களுக்குப் பின்னடைவு வரும் என்றே நம்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலில் தொகுதிக்கு மூன்று பேர் என்ற பெரமுனவின் யோசனையை எப்படி பார்க்கின்றீர்கள்? என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோது,
அது எந்தப் பகுதிக்கும் பொருத்தமில்லை. அது மிகவும் குழப்புகின்ற ஒரு நிலைமை. பசில் ராஜபக்ச தாம் மூன்று பேரும் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொருவரை கோட்டால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் தான் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.
இது ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் ஒரு விடயம். அரசியல் கட்சிகளை கேள்விக்கிடமாக்கும் ஒரு விடயமாகத் தான் இதனை பார்க்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.