அதிகாரிகளை தாக்க முயன்ற ராஜபக்சக்களின் தீவிர விசுவாசி.. 12 வருடங்களுக்கு பிறகு நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு
தென்னிலங்கை பாடகர்களில் ஒருவரான சிலி என்றழைக்கப்படும் திலங்க விதூஷ என்பவர், பொலிஸாரைத் தாக்க முயன்ற குற்றச்சாட்டின் கீழான வழக்கொன்றில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு டெங்கு பரிசோதனைக்காக தலங்கம பிரதேச பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பாடகர் திலங்க விதூஷவின் வீட்டுக்கும் சோதனை மேற்கொள்வதற்காக சென்றுள்ளனர்.
அதன்போது குறித்த பாடகர் பொலிஸாரைத் தாக்க முயன்றதுடன், அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடுவெலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குற்றவாளி என தீர்ப்பு..
சுமார் பன்னிரண்டு வருடங்களாக விசாரிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு, கடுவலை மாஜிஸ்திரேட் அருண இந்திரஜித் புத்ததாசவினால் நேற்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்போது பொலிஸாரைத் தாக்க முயன்ற சம்பவத்தில் பாடகர் சிலி என்றழைக்கப்படும் திலங்க விதூஷ குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜுலை 22ஆம் திகதி அவருக்கான தண்டனை பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாடகர் திலங்க விதூஷ' கடந்த 2013ஆம் ஆண்டு தொடக்கம் ராஜபக்ச குடும்பத்தின் தீவிர விசுவாசிகளில் ஒருவராக செயற்பட்டு வரும் ஒருவர் என அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
ராஜபக்ச குடும்ப ஆட்சிகளின் போது குறித்த பாடகர் பல்வேறு நபர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள், தான்தோன்றித் தனமாக செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாக பல்வேறு கட்டங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.