திடீரென்று எதிர்க்கட்சி தலைவரை பதவி நீக்கிய சிங்கப்பூர் பிரதமர்
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிதம் சிங், தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர்
இவர் சிங்கப்பூர் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார்.
இந்த நிலையில் சிங்கபூர் பிரதமர் லாரன்ஸ் வாங், பிரதம் சிங்கை அவரது எதிர்க்கட்சி பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
"இந்த விஷயத்தை கவனமாகப் பரிசீலித்த பிறகு, பிரிதம் சிங்கின் குற்றவியல் தண்டனைகளும், அவர் அந்த பதவிக்குத் தகுதியற்றவர் என்பது குறித்த நாடாளுமன்றத்தின் ஆழமான கருத்தும் சேர்ந்து, அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வது இனி சாத்தியமில்லை என்று நான் முடிவு செய்துள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்க்கட்சி உடனடியாக மாற்று எதிர்க்கட்சி தலைவரை நியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற விவாதம்
இருப்பினும், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியும் தொடர்ந்து நீடிக்கும்.
ஆனால், மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களின் போது முதலில் பதிலளிக்கும் உரிமை போன்ற சலுகைகளை அவர் இழப்பார் என்று கூறப்படுகின்றது. 49 வயதாகும் பிரிதம் சிங், தொழிலாளர்கள் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார்.

இவர் 2021 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் சட்டவாக்க உறுப்பினர் ரயீஸா கான், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணொருவரிடம் பொலிஸார் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதை தான் கண்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்ததே இந்த வழக்குக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. பின்னர் அவர் தனது கூற்று உண்மையல்ல என்பதை ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் விசாரணையில், சிங் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் இந்த பொய்யான தகவலை அறிந்திருந்த போதிலும், அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு அவருக்கு அறிவுறுத்தியமை தெரியவந்தது.
வழக்கு விசாரணை
பின்னர் கான் கட்சியிலிருந்தும் நாடாளுமன்றத்திலிருந்தும் பதவி விலகல் செய்ததுடன், பொய்யான தகவல்களைக் கூறியமை மற்றும் நாடாளுமன்ற சிறப்புரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் அவருக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கானின் வழக்கை விசாரிக்கும் போது நாடாளுமன்றக் குழுவின் முன் முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து பொய் கூறியமை தொடர்பில் சிங்கிற்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்ததுடன், அவருக்கு பல்லாயிரக்கணக்கான டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஆனால் வழக்கு விசாரணைகள் முழுவதும் தான் நிரபராதி என்று கூறிய சிங், உணர்வுபூர்வமான விடயமொன்றைக் கையாள்வதற்கு கானுக்கு அவகாசம் வழங்கவே வேண்டும் என விரும்பியதாகத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட அவர், அத்தீர்ப்பிற்கு எதிராகச் செய்த மேன்முறையீடும் தோல்வியடைந்தது.