பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக ஏறாவூரில் கையெழுத்து போராட்டம்(Photos)
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்துத் திரட்டும் போராட்டம் கிழக்கில் இன்றும் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு - ஏறாவூர் மணிக்கூடு கோபுரத்தடியில் இன்று காலை மக்களின் பேராதரவுடன் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கையெழுத்து போராட்டம்
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், சர்வமதத் தலைவர்கள் மற்றும் தமிழ், முஸ்லிம் மக்கள் எனப் பலரும் பங்கேற்றுள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி காங்கேசன்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,
விலைபோன அமைச்சர் வாழும் பிரதேசமா ஏறாவூர்
“மட்டக்களப்பின் ஏறாவூர் என்றால் ஆயிரம் ரூபா தாளில் வரும் யானையினை வழங்கியவர் வாழும் பகுதியென தெற்கில் உள்ள மக்களுக்கு நினைவுக்கு வரும்.
ஆனால் கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட 20வது திருத்த சட்டத்திற்கு பிற்பாடு விலைபோன அமைச்சர் வாழும் பிரதேசமா ஏறாவூர் என்று கேள்வியெழுந்துள்ளது.
இது ஏறாவூரில் வாழும் அனைத்து மக்களுக்குமான அவமானம். இதேபோன்று அவருடன் இணைந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களை அவமானப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள்.
இன்று பாடசாலைகளில் மாணவர்கள் உணவு இல்லாமல் மயங்கிவிழும் நிலையில் இந்த மாவட்டத்தினை சோந்த மூன்று பேர் சென்று தமது புழைப்புக்காக அமைச்சுகளை எடுத்துக்கொண்டது இந்த மாவட்டத்திற்கான அவமானமாகும்.
நிதியே இல்லாத ஒரு நாட்டில் வீதி அபிவிருத்திக்கு ஒரு அமைச்சர், வர்த்தகர்கள் இந்த நாட்டிலிருந்து ஓடி ஒளிந்துகொண்டிருக்கும் காலத்தில் வர்த்தகத்திற்கு ஒரு அமைச்சர். எமது சுற்றுச்சூழலை மீண்டும் அழிப்பதற்கு ஒரு அமைச்சர். முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரித்து முஸ்லிம்களை கொடுமைப்படுத்திய இந்த ராஜபக்சக்களை பாதுகாப்பதற்கு ஐ. நா மனித உரிமைகள் சபைவரைக்கும் செல்வதற்கு இவர்கள் தயாராகயிருக்கின்றார்கள்.
ராஜபக்சக்கள் செய்த அநியாயங்களை நாங்கள் சென்று ஐ.நா மனித உரிமை சபையில் கூறும்போது அவர்கள் அநியாயம் செய்யவில்லையென சொல்வதற்கும் ஓரு கூட்டம் மட்டக்களப்பில் இருக்கின்றது.
உயர்தரப்பரீட்சை மாணவர்கள்
இன்று உயர்தரப்பரீட்சை எழுதவுள்ளவர்கள் தமது பரீட்சையினை மூன்று மாதங்களுக்கு பிற்போட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். உயர்தரப்பரீட்சை முடிவுகள் மிகவும் பிந்தி வெளியிடப்பட்டமையும் ஒரு காரணமாகும்.
இது தொடர்பில் உயர்தரம் எழுதும் மாணவி ஒருவர் கடையில் கலாநிதி வாங்கிய இராஜாங்க அமைச்சர் சுரேன்ராகவனிடம் கோரிக்கை விடுத்தபோது நாட்டில் போராட்டங்கள் நடந்தால் நீங்கள் கற்காததற்கு உங்கள் தாய் தந்தையர்களின் பிழையென கூறியுள்ளார்.
இவ்வாறான மோசமான கருத்துகளை வெளியிட்ட இராஜாங்க அமைச்சரை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
பயங்கரவாத தடுப்புச்சட்டம் நாட்டுக்காக வீதியிலிறங்கி போராடியதற்காக வசந்த முதலிகே போன்றவர்கள் பயங்கரவாதிகள் என கைதுசெய்யப்பட்டு 90நாட்களுக்கு மேலாக சிறையில் வைத்திருக்க முயற்சிக்கும் அரசாங்கம், அமைச்சர் பிரசன்ன ரணவீரவினுடைய மகன் அரச வாகனத்தினை பயன்படுத்தி தனது காதலிக்கு காதல் கடிதம் வழங்கியதாக கூறி இளைஞனை குண்டர்களுடன் சென்று தாக்கியுள்ளார். அவருக்கு பொலிஸ் பிணை உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.
இதுதான் இந்த நாட்டினுடைய நிலைமை. நாட்டு மக்களை அடக்குவதற்கு பயங்கரவாத தடுப்புச்சட்டம். அரசாங்கத்தின் கைக்கூலியாக செயற்படுபவர்களுக்கு உழைப்புக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றது.
இதற்காக தனது சொந்த சமூகத்தினை காட்டிக்கொடுப்போர் நாடாளுமன்றத்தில் இந்த மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் உள்ளனர்.” என்றார்.