இராணுவத்தினர் கைது செய்யப்பட்டமை வெறும் கண்துடைப்பு : ரா.சாணக்கியன்
முல்லைத்தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன்(Shanakiyan Rajaputhiran Rasamanickam) தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் தனது உத்தியோக பூர்வ முகப்புத்தக பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில்,
ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கபட்டமைக்கு எனது வன்மையான கண்டனங்கள். முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது கடந்த 27ஆம் திகதி இராணுவத்தினர் மிலேச்சத்தனமான முறையில் திட்டமிட்ட வகையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முள்ளியவாய்க்கால் கிழக்கில் வசித்து வரும் குறித்த ஊடகவியலாளர் கடந்த 27ஆம் திகதி செய்தி சேகரிப்பிற்காக முல்லைத்தீவு சென்று அங்கிருந்து வீடு திரும்பிய நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் பெயர்ப் பலகையினை ஒளிப்படம் எடுத்த நிலையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட நான்கு இராணுவத்தினர் ஊடகவியலாளரைக் கேள்வி கேட்டு அடையாளப்படுத்தச் சொல்லிக் கோரிய வேளை குறித்த ஊடகவியலாளர் அடையாள அட்டையினை எடுத்துக் காட்ட முற்பட்ட வேளையில் படையினர் ஊடகவியலாளர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதல் நடத்திய படையினர் இராணுவச் சீருடையிலும் கடமை அல்லாத நேரத்தில் இராணுவம் அணியும் உடையுடன் நின்று தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் இராணுவம் தாக்குதலுக்காகப் பயன்படுத்திய பச்சை பனை மட்டை ஒன்றில் முள்ளு கம்பிகள் சுற்றப்பட்ட ஆயுதம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று இராணுவத்தினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதுடன், பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது வெறும் கண்துடைப்பு கைதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெறும் சம்பவங்களை பார்க்கின்ற போது, எம்முள் அச்ச உணர்வு ஒன்று தோன்றுவதுடன், நாடு இராணுவ மயமாக்கலினை நோக்கி நகர்கின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது. இதனைக் கூட்டமைப்பு என்ற வகையில் பலமுறை உரக்கச்சொல்லியிருக்கின்றோம்.
இது குறித்து இராணுவத்தளபதி மற்றும் அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) ஆகியோர் மௌனம் காக்கின்றமை வருத்தமளிக்கின்றது. குறித்த இருவரும் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்த விரும்புகின்றோம்.
தற்போதைய அரசாங்கத்தின் கடந்த ஆட்சிக்காலத்தின் போதும் மிக மோசமான ஊடக அடக்குமுறைகள், ஊடகவியலாளர்களைக் கடத்திப் படுகொலை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்தநிலையில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட மாட்டார்கள் எனக் கூறி தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
எனினும் தற்போதைய அரசாங்கத்தில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. குறிப்பாகப் பிழைகளைச் சுட்டிக்காட்டுகின்ற ஊடகவியலாளர்கள் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றார்கள்.
இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இவ் நாட்டில் எமது மக்களுக்கும் சுதந்திரமில்லை, ஊடகவியலாளர்களுக்கும் சுதந்திரம் இல்லை. சுதந்திர ஊடக முடக்கமானது ஒரு நாட்டின் முடக்கத்துக்கு ஒப்பானது.
அரச சார்பான தமிழ் அரசியல்வாதிகள் இவ் அரசின் இவ்வாறான செயல்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதும் பக்கச் சார்பாகச் செயல்படுவதும் அவர்களுக்குச் சார்பாகச் செயல்பாடுகளைச் சரி எனவும் நிறுவிக் கொள்வதுமாகவே இருக்கின்றனர். இவ் அரசின் காலத்திலேயே எம் மக்கள் பல இன்னல்களை அதிகளவாக அனுபவித்தனர் அனுபவித்துக்கொண்டும் வருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

