விகாரைக்கு அடிக்கல் நாட்டி விட்டு குருந்தூர் மலை பற்றி பேசும் சாணக்கியன் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
கிழக்கில் விகாரைக்கு அடிக்கல் நாட்டி விட்டு குருந்தூர் விகாரை பற்றி இரா.சாணக்கியன் பேசுவது வெக்கக் கேடானது என மட்டக்களப்பு மாவட்ட ஈ.பி.டி.பி. கட்சி ஒருங்கிணைப்பாளர் வர்த்தகர அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஈ.பி.டி.பி கட்சியின் வாராந்த ஊடக மாநாட்டின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வரிப்பணம் இந்த வீதி திறப்பு விழாவுக்கு
இன்று உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றி ஆட்சி செய்து வரும் சில பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மக்களுடைய வரிப்பணத்தில் அரசியல் செய்கின்ற ஒரு கேவலமான நிலைக்கு வந்துள்ளது.

அண்மையில் களுவாஞ்சிக்குடியில் தமிழரசு கட்சியின் தவிசாளர் இது என்னுடைய பணம் என்னுடைய வீதி என்னுடைய சபை என தெரிவித்தது ஊடகங்கள் ஊடாக பார்த்தோம்.
இது அவருடைய முப்பாட்டனார் சொத்து அல்ல மக்களின் வரிப்பணம் இந்த வீதி திறப்பு விழாவுக்கு சபையின் வாகனத்தில் செல்லும் வாகனத்தின் டீசல் மக்களுடைய வரிப்பணம் என்பதை பிரதேச சபை தவிசாளர்கள் மறந்துவிடக்கூடாது.
இன்று ஆட்சியை கைப்பற்றப்பட்ட பிரதேச சபைகளின் தவிசாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்கள் இருக்கின்றனர்.
எனவே அவர்களுக்கு எதிராக விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறோம்.
கிழக்கு மாகாணத்தில் விகாரைகளை கட்டுவதற்கு
மட்டக்களப்பு எல்லை கிராமமான கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வடமுனை ஊத்துச்சேனை பகுதியில் உள்ள நெலுகல் மலையில் 2021ஆம் ஆண்டு நெலுகல் ரஜமல் விகாரை என்ற பெயரில் பாரிய பௌத்த விகாரை ஒன்று புதிதாக அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
இதற்கு எந்த தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

அதேவேளை சிறீலங்கா சுதந்திர கட்சி பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராக இருந்த இரா.சாணக்கியன் மட்டக்களப்பு சின்னவத்தை பிரதேசத்தில் உள்ள விகாரையில் கட்டிடம் ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு மட்டு அம்பிட்டிய சுமணரட்ண தேரருடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அழைத்து அடிக்கல் வைத்தவர்.
இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் விகாரைகளை கட்டுவதற்கு அமைச்சர்களை அழைத்து அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டுவிட்டு இன்று வவுனியாவில் உள்ள குருந்தூர் மலை விகாரை தொடர்பாக பேசுகின்றனர் இது ஒரு வெட்கக்கேடான விஷயம்.
இவ்வாறு அவர் வடக்கில் இருந்து கிழக்கிற்கு அதிவேக பாதை அமைக்க வேண்டும் என கோருகின்றார். இதற்கு யார் பணம் வழங்குவது? எனவே வாயால் வடைசுடும் வேலைகளை விட்டுவிட்டு மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் மக்களுக்கு என்ன தேவை இருக்கின்றது என உணர்ந்து மக்களுக்கு சரியான சேவைகளை செய்ய வேண்டும்.
சொத்து குவிப்பு பட்டியல்
கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் மோசடியில் ஈடுபட்டு சட்டவிரோத சொத்து குவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல பேர் இருக்கிறார்கள்.
இந்த சொத்து குவிப்பு பட்டியல் இரா.சாணக்கியன் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. அவருக்கு ரணிலால் ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி என நானும் இலஞ்ச ஒழிப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருக்கின்றேன்.

அந்த ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபா நிதியில் கோட்டை கல்லாற்றில் பாழடைந்த கட்டிடம் ஒன்றுக்கு 50 இலட்சம் ரூபாய் கொடுத்து சிறிய திருத்த வேலைகள் செய்து அதற்கு யன்னல் கதவுகள் இல்லாத முடிவடையாத கட்டிடத்தை வாடகைக்கு விடப்படும் என விளப்பரபதாதை ஒன்று காட்சிபடுத்தபட்டு 50 இலட்சத்தை வீணடித்துள்ளார்.
இது போன்று கல்லாறு பாடசாலைக்கு உள்ளக விளையாட்டு கட்டிடம் அமைக்க 36 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
அங்கு வெறும் தூண்கள் மட்டும் அமைக்கப்பட்டு கட்டிடம் பூர்த்தியாகியதாக பணம் எடுக்கப்பட்டுள்ளது. இவைகளை யார் பார்வையிட்டு இந்த நிதிகளை பூர்த்தி செய்யப்பட்டதாக நிதி வழங்கியது யார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.