இலங்கையில் என்னை புலி என்கிறார்கள் - கனடாவில் புலி இல்லை என்று ஏசுகிறார்கள்: கனடாவில் ஆதங்கப்பட்ட சாணக்கியன்
இலங்கையில் என்னை புலி என்கிறார்கள், கனடாவில் புலி இல்லை என்று ஏசுகிறார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்(Shanakiyan) தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
கனடா வாழ் இலங்கை முஸ்லீம் சமூகத்தினருடனான சந்திப்பு ஒன்று நேற்று(புதன்கிழமை) ஒழுங்குபடுத்தப்பட்டது. இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் இட்டுள்ள பதிவில்,
கனடா வாழ் இலங்கை முஸ்லீம் சமூகத்தினருடனான சந்திப்பு ஒன்று நேற்று(புதன்கிழமை) ஒழுங்குபடுத்தப்பட்டது. அதில் நானும் நாடாளுமன்ற உறுப்பினரான எம். எ சுமந்திரனும்(Sumanthiran) பங்குபற்றி இருந்தோம்.
உண்மையிலேயே என்னைப் பொறுத்தவரையில் நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒருவராகவே நான் என்னை பார்க்கின்றேன். சில இஸ்லாமிய அரசியல்வாதிகள் மத்தியில் கருத்து ஒன்று உள்ளது.
இவர் என்ன எங்களுடைய பிரச்சனைகளைக் கதைக்கின்றார். எங்களுக்காகப் பேசுகின்றார் என. எனினும் நான் அனைத்து பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுக்கின்றேன்.
அதிலே இஸ்லாமியச் சகோதரர்கள் மத்தியிலேயே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் போது எங்களைப் பாராட்டுவதனை விடவும், இஸ்லாமியர்களுடைய பாராட்டுக்கள் அதிகமாக வருகின்றது.
எனக்கு முன்னர் உரையாற்றிய ஒருவர் சொன்னார், நாங்கள் அவர்களுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று. அது உண்மைதான். என்னை பொறுத்தவரையில் நான் அந்த வாக்குகளை எதிர்பார்த்து எதனையும் செய்யவில்லை.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படாவிடின், எதிர்காலத்தில் பேரினவாதிகளின் ஆதிக்கம் கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவிடும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |