செவ்வந்தி கைது பின்னணி: பொலிஸாரின் கவனத்தை திசைதிருப்ப வகுத்த இரகசிய திட்டம்
கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் 'கணேமுல்லை சஞ்சீவ' என்ற பாதாள உலக கும்பல் உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி கடந்த மே மாதம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச்சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
'கனேமுல்லை சஞ்சீவ' கொலை செய்யப்பட்டதன் பின்னர் சுமார் மூன்று மாதங்களாக அவர் நாட்டினுள் ஒளிந்திருந்ததாகவும் இஷாரா செவ்வந்தி விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் பக்கம் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனம் திசை திரும்பியிருந்த போது, குறித்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இஷாரா செவ்வந்தி நாட்டினுள் அடைக்கலம்
மித்தெனியவிலிருந்து தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுபுன் என்னும் அரச அதிகாரியுடன் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கிருந்து ஜே.கே. பாய் எனப்படும் கெனடி செபஸ்தியன் பிள்ளையுடன் மீன்பிடி படகின் மூலம் இந்தியாவுக்கு தப்பிச்சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஷாரா செவ்வந்தி நாட்டினுள் தலைமறைவாகியிருந்த காலப்பகுதியில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட சந்தேகநபர்கள் மூவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பக்தபூர் திப்பஸ் பார்க் பிரதேசத்தில் வைத்து செவ்வந்தி உட்பட மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கடந்த 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
நேபாளத்தில் அழைத்துவரப்பட்ட 6 பேரில், இஷாரா செவ்வந்தி (26), டம்மி இஷாரா என அறியப்படும் தக்ஷி நந்தகுமார் (23), ஜே.கே. பாய் எனப்படும் கெனடி செபஸ்தியன் பிள்ளை (35), ஜப்னா சுரேஷ் எனப்படும் ஜீவதாசன் கனகராசா ஆகியோரிடம் சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



