பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு செந்தில் தொண்டமான் அவசர கடிதம்
பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தொடர்பான விசாரணைகளில் நம்பிக்கையிழந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அவசர கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு இன்று (08) அவர் அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பில் பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட கருத்தானது பாகிஸ்தான் அரசாங்கம் இந்த கொலை சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகளில் நம்பிக்கை இழக்க செய்துள்ளது.
இந்த கொடூர சம்பவம் இடம்பெற்று ஓரிரு மணித்தியாலங்களிலேயே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்தமையை வரவேற்கின்றேன்.
எனினும், பொலிஸ் உத்தியோத்தர்கள் முன்னிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதை நிவர்த்தி செய்யும் வகையில், உடனடியாக 130க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டமை அந்த நாட்டின் மீதான நம்பிக்கையை தக்கவைத்தது.
பிரதமர் இம்ரான் கான் இவ்வாறு துரித கதியில் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளையில், பாகிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பில் உயரிய பதவியிலுள்ள அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் (Parvez Cuttack), பிரதமரின் நடவடிக்கைகளை மீறி குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பகிரங்கமாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டமை, விசாரணை மீதான நம்பிக்கையை இழக்க செய்துள்ளது.
இலங்கை – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான பல தசாப்த நட்புறவானது, சில மதவாத கொலைகாரர்களால் பாதிக்கப்படக்கூடாது என்பதுடன், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு தொடர வேண்டும் என்பதே எமது நாட்டவரின் எதிர்பார்ப்பு.
எனினும், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக்கின் கருத்தினூடாக ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மையை இல்லாது செய்து விசாரணைகள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கு, சர்வதேச கொள்ளைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செந்தில் தொண்டமான், பாகிஸ்தான் பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரியந்த! பிரதான சந்தேகநபர் அளித்துள்ள வாக்குமூலம்
பிரியந்தவின் சடலம் சற்றுமுன்னர் மண்ணில் புதைக்கப்பட்டது