நேரடி அரசியலில் இறங்கியமையால் எம் மீது விசமத்தனமான அபத்தக் குற்றச்சாட்டுகள்: வித்தியாதரன்!
தான் நேரடி அரசியலில் இறங்கியமையால், சில முகம் தெரியாத தரப்பினர் விசமத்தனமான அபத்தக் குற்றச்சாட்டுகளையும் கூறி வருவதாக மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் விசனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்றைய தினம் (05.04.2023) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
நீண்ட சுமார் 40 ஆண்டுகள் ஊடகப் பட்டறிவு கொண்ட நான் அரசியலில் நேரடியாக இறங்கியமையை அடுத்து என் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் துர்நோக்கில், வெளியில் தம்மை அடையாளப்படுத்தாத சில அநாமதேய சமூக ஊடகத் தரப்புகளும், ஓர் அச்சு ஊடகங்கமும் வேண்டுமென்றே திட்டமிட்டுப் பொய்த் தகவல்களையும், ஆதாரமேயற்ற புனைகதைகளையும் பெரும் எடுப்பில் பரப்பி வருகின்றன என்பதை விசனத்துடன் சுட்டிக்காட்டுகின்றேன். என் பொது வாழ்வில் இத்தகைய அபத்தக் குற்றச்சாட்டுகள் புதியவை.
குற்ற விசாரணைப் பிரிவினர்
யாழ். இந்து கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார் என்று வெளியான தகவலையொட்டி நடைபெற்ற பொலிஸ் விசாரணையைத் திரித்து, என் மீது பாலியல் குற்ற அவதூறு பிரசாரம் செய்வதற்கு இந்தத் தரப்புக்கள் அதனை விசமத்தனமாகப் பயன்படுத்துகின்றன.
சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவத்திற்கும், எனக்கோ அல்லது நான் இதுவரை காலம் பணியாற்றிய காலைக்கதிர் பத்திரிகைக்கோ அல்லது அதன் ஊழியர்கள் எவருக்குமே தொடர்பு ஏதும் இல்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.
எனினும், இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் யாழ் பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான குற்ற விசாரணைப் பிரிவினர் பிரதான சந்தேக நபர் ஒருவரை அடையாளம் கண்டுள்ளனர் என நான் அறிகிறேன். அவர் தொடர்பான சிசிடிவி கமரா பதிவுகளையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. அந்தப் பிரதான சந்தேக நபர் எச்சமயத்திலும் கைதாகக் கூடும்.
உண்மைத் தன்மை
கல்லூரி மாணவனுக்கும் கல்லூரியுடன் சம்பந்தப்படாத வெளியாள் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவத்தைக் கல்லூரியை இலக்கு வைத்து பாலியல் வலை அமைப்பு இயங்குவதாகக் குறிப்பிட்டு, கல்லூரிக்கும் நிர்வாகத்துக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் கேவல சதி நடவடிக்கையும் ஊடகத்தின் பெயரால் தொடர்ந்து அரங்கேறுவது துரதிஷ்டமாகும்.
இந்தச் சம்பவம் தொடர்பில் எமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதால் என்னையோ, எனது முன்னைய பத்திரிகையின் தற்போதைய நிர்வாகத்தையோ, பத்திரிகையின் முன்னாள், இந்நாள் ஊழியர்கள் எவரையுமே பொலிஸார் விசாரணைக்குக் கூட அழைக்கவில்லை என்பதைப் பகிரங்கப்படுத்துவதோடு, இந்த விடயம் குறித்து தங்கள் அடையாளத்தையோ பொறுப்பு கூறலையோ வெளிப்படுத்தாமல் இவ்வாறு ஊடக அதர்மத்தைப் பிரதிபலிக்கும் இந்தப் பிரகிருதிகளை தங்கள் செய்திக்கான ஆதாரத்தை வெளிப்படுத்தி உண்மைத் தன்மையை நிரூபிக்கும் படியும் பகிரங்க சவால் விடுக்கிறேன்.
பெயர் விவரம் குறிப்பிடாத பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி இத்தகைய அவதூறு ஏற்படுத்தும் செய்திக்கு வலுசேர்க்கும் பத்திரிகை அதர்மமும் யாழ்ப்பாணத்தில்தான் சர்வசாதாரணமாகத் தொடர்கின்றது.
தங்கள் செய்தி திட்டமிட்டுப் பரப்பப்படும் விஷமத்தனமான வதந்தி என்பதை நன்கு அறிந்திருந்தும், 'பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன' என அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் வதந்திகளை அந்த ஊடகம் வெளியிடுவதும், அதை பொலிஸ் தரப்பு பார்த்திருப்பதும், இத்தகைய அதர்ம, அவதூறு, பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு பொலிஸ் தரப்பும் கூட பின்னணியும் காரணமா என்ற நியாயமான சந்தேகமும் எழுகின்றது.
காலம் உண்மைகளை வெளிப்படுத்தும்
என் பெயரை இந்த விடயத்துடன் தொடர்புப்படுத்தி செய்தி வெளியிட்ட சில தரப்புகளை அடையாளம் கண்டுள்ளேன். அவற்றுக்கு எதிராக உள்நாட்டிலும், வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாகவும் உரியச் சட்ட நடவடிக்கை எடுக்கவிருக்கிறேன்.
உள்ளூர்ப் பத்திரிகை ஒன்று என் பெயர் குறிப்பிடாமல், நான் பணியாற்றிய பத்திரிகையின் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடாமல் அதை இழுத்துத் தனது வழமையான கிசுகிசுப் பாணி செய்தியாக இந்த விடயத்தைத் தன் முன் பக்கத்தில் மிகப்பெரிய ஐந்து கொலம் புதினமாக வெளியிட்டு, தனது வக்கிரத்தைக் காட்டியுள்ளது.
இத்தகைய அத்துமீறலை - அக்கிரமத்தை - சுயநல அரசியலுக்காக அனுமதித்து, ஊக்குவித்து நிற்கும் அதன் நிர்வாகியும் கண்டிக்கப்பட வேண்டியவர் மட்டுமல்ல, தண்டிக்கப்படவும் வேண்டியவர்.
சட்டம் தன் பணியைச் செய்யும், தர்மம் நிலை நிறுத்தப்படும், காலம் உண்மைகளை
வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
