கோவிட் தடுப்பூசி பெறுவதை புறக்கணிக்கும் சிரேஷ்ட பிரஜைகள்!
கோவிட் தடுப்பூசி பெறுவதை மக்கள் ஒரு பகுதியினர் புறக்கணித்துள்ளனர் என்பதில் சுகாதார அதிகாரிகள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இறப்புக்கள் குறையாது இருப்பது மற்றும் தொற்றாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து ஒரே மட்டத்தில் செல்வதை அடுத்தே இந்த விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித கினிகே, இது தொடர்பில் கருத்துரைக்கையில், கோவிட் தடுப்பூசிகளை பெற 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் தயக்கம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியின் முக்கிய நோக்கம் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதும், நோய் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதுமாகும். இருப்பினும், சில சிரேஷ்ட பிரஜைகள் தடுப்பூசி பெறுவதை புறக்கணிப்பதை தாம் அவதானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொற்றுநோய் பரவியதில் இருந்து இதுவரை நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கையை (4,175) கருத்தில் கொள்ளும் போது, 77% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தயக்கமின்றி தடுப்பூசி பெறுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கோவிட் உடனேயே வாழ வேண்டியிருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.