விகாராதிபதி கொலை - துபாயில் இருக்கும் யுவதியை கைது செய்ய நடவடிக்கை
சீதுவ, வெட்டேவ ஸ்ரீ நந்தாராம விகாரையின் விகாராதிபதியின் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் துபாயில் வசிக்கும் இஸ்லாமியர் ஒருவரையும், 23 வயதுடைய யுவதியையும் கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
துபாயில் உள்ள 23 வயதுடைய யுவதி விகாராதிபதியின் கொலைச் சம்பவத்தில் பிரதான சந்தேகநபர் என கூறப்படும் 19 வயதுடைய இளம் பிக்குவின் காதலி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உண்டியல் முறை மூலம் அனுப்பப்பட்ட பணம்
விகாராதிபதியின் மரணத்தின் பின்னர் பெறப்பட்ட டிபெண்டர் ஜீப் மற்றும் வேகன்ஆர் ஆகிய வாகனங்களை விற்பனை செய்து பெறப்பட்ட இரண்டு கோடி ரூபா பணம் துபாயில் 23 வயதுடைய யுவதிக்கும் முஸ்லிம் நபருக்கும் உண்டியல் முறை மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 19 வயதுடைய சிவரதாரிய ஏகல சுமணசிறி என்பவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் அதிகாலை 1.00 மணியளவில் சீதுவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி தனுஷ்க பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேஸ்புக் மூலம் அறிமுகம்
சந்தேகநபரான பிக்குவும், குறித்த யுவதியும் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆகியுள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த இருவரும் இதுவரை ஒருவரையொருவர் சந்தித்ததே இல்லை, இணையம் மூலம் தங்கள் காதல் உறவைப் பேணி வந்துள்ளனர்.
விகாராதிபதியின் சொத்துக்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் சந்தேகநபர் தனது காதலியிடம் கூறியுள்ளார். 23 வயதுடைய குறித்த யுவதி மினுவாங்கொட ஹீனாட்டியான பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் அவர் அண்மையில் துபாய்க்கு வேலைக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துபாயில் வசிக்கும் இஸ்லாமியர் ஒருவரின் கீழ் அவர் பணிபுரிந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விகாராதிபதியின் சொத்துக்கள் குறித்து அந்த யுவதி தனது எஜமானரான இஸ்லாமிய நபரிடம் கூறியுள்ளார். பின்னர், இருவரும் விகாராதிபதியை கொலை செய்துவிட்டு சொத்தைப் பெற திட்டமிட்டனர்.
இந்த கொலைக்காக குறித்த யுவதி தனது பெற்றோரை பயன்படுத்தியுள்ளார். 23 வயதுடைய பெண் விகாராதிபதியை கொலைசெய்து விட்டு அனைத்து சொத்துக்களையும் கைப்பற்றி துபாய்க்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தார்.
தலைமறைவான பெற்றோர்
எனினும், சந்தேகநபராக பிக்கு துபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட விகாராதிபதிக்கும் சந்தேகநபருக்கும் இடையில் சொத்து தொடர்பில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விகாராதிபதியை கொலை செய்ததாகக் கூறப்படும் துபாய் யுவதியின் பெற்றோர்கள் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்ய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
சந்தேகத்திற்கு இடமான தம்பதிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அவர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் விமான நிலையத்திற்கு வழங்க பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.