எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு பாதுகாப்பு கோரும் சஜித்
"பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு மூலம் ஜகத் விதானவின் குடிமகன் என்ற முறையிலான சிறப்புரிமைகளும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலான அவரது சிறப்புரிமைகளும் மீறப்பட்டுள்ளன.
எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து பொலிஸ்மா அதிபர் கவனம் செலுத்தி, சகல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விசேட அறிவிப்பை விடுத்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

"தற்போதைய பொலிஸ்மா அதிபரின் சில நடவடிக்கைகள் பெரிதும் அரசியல் மயமாகிக் காணப்படுகின்றன. சில விசாரணைகள் அரசியல் மற்றும் ஊடகக் காட்சிப்படுத்தல்களாக மாற்றப்பட்டுள்ளன.
அரசின் பிரசாரக் கட்டமைப்பின் ஒரு தரப்பாகப் பொலிஸ்மா அதிபர் மாறிவிட்டார் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் மூலம் தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.
அச்சுறுத்தல்கள் தொடர்பாக முறைப்பாட்டாளராகச் செயற்படும் போது அவரைக் குற்றவாளியாக அழைப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அரசியல் மயமாக்கல்
பாதுகாப்பு வழங்குவது அரசியல் மயமாக்கப்பட்டு விட்டதா அல்லது பாதுகாப்பை வழங்கும் பெரும் பொறுப்பை அரசியல்வாதிகள் தங்கள் கைகளில் எடுத்துள்ளனரா என்று கேள்வி எழுப்புகின்றோம்.
ஜகத் விதானவின் பாதுகாப்பு தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருக்கின்றோம். அரசு, பொலிஸ்மா அதிபர், சட்டம் மற்றும் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் உள்ளிட்ட சகலரும் ஜகத் விதானவின் பாதுகாப்பை உறுதி செய்து, அவரது உயிரைப் பாதுகாக்க வேண்டும்.
220 இலட்சம் குடிமக்களுக்குப் பாதுகாப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசு பொறுப்பேற்க வேண்டும்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களினது பாதுகாப்பு தொடர்பில் அதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து பொலிஸ்மா அதிபர் கவனம் செலுத்தி, சகல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |