சமாசத்தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மக்கள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் தங்க ரூபனைச் சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாளையடி நன்னீர் திட்டத்தால் வடமராட்சி கிழக்கு அனைத்து சங்கங்களுக்கும் இரண்டு படகுகள் இயந்திரத்துடன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக
இதன் அடிப்படையில் நாகர்கோவில் மேற்கு கடற்றொழிலாளர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட படகில் முறைகேடு இருப்பதாக கூறி நாகர்கோவில் மேற்கு கடற்றொழிலாளர்கள் நேற்று(30) பிரதேச செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு பிரதேச செயலருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

இதன் பின்பு நேரடியாக வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசத்திற்கு சென்று சமாசத் தலைவர் தங்கரூபனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவில் மேற்கு கடற்றொழிலாளர் சங்கத்தில் மேற்கொள்ளப்படும் ஊழல்களுக்கு சமாசத்துக்கும் தொடர்பு இருப்பதாகவும் அன்பளிப்பாக வழங்கப்பட்ட படகில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக உரிய முறையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக சமாச தலைவர் தெரிவித்ததன் பிரகாரம் கடற்றொழிலாளர்கள் கடிதம் ஒன்றை கையளித்தபின் அப்பகுதியை விட்டு விலகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |