மட்டு.கல்லடியில் கத்திகுத்து தாக்குதல்! சந்தேகநபர் தலைமறைவு
மட்டக்களப்பு - கல்லடியில் தனிப்பட்ட தகராறு காரணமாக மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி டச்பார் வீதி, 8 ம் குறுக்கு வீதியிலுள்ள கத்தி குத்துக்கு இலக்கானவர் சம்பவ தினமான இன்று அதே வீதியிலுள்ள தனது வீட்டிற்கு அருகாமையிலுள்ள குறித்த நபரின் வீட்டிற்கு சென்று தனிப்பட்ட விடயம் தொடர்பாக அவரிடம் கேட்டுள்ளார்.
இந்த நிலையில், இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய் தர்க்கத்தின் போது வீட்டிற்கு சென்றவர் மீது கத்திகுத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது 43 வயதுடைய ரகுபதி உதயகுமார் என்பவர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கத்திகுத்து தாக்குதலை நடாத்திய 32 வயதுடைய செரன் அவுஸ்கோன் என்பவர் தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தப்பியோடிய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.