கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி! - மூவர் கைது
எம்பிலிபிட்டிய பகுதியில் 16 வயது பாடசாலை மாணவியை கடத்தியமை தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செவனகல பகுதிக்கு கடத்திச்செல்லப்பட்ட மாணவி, அங்குள்ள பாழடைந்த வீடொன்றினுள் வைத்து, ஒருவரால் துஷ்பிரயோகம் செய்ய முயற்சிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், மாணவி குறித்த நபர் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். தற்போது மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று பகல் இடம்பெற்றுள்ளது. பாடசாலையிலிருந்து வெளியேறிய போது, முச்சக்கரவண்டியில் சென்ற மூவர் மாணவியை பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.