டொலரின் பெறுமதி வீழ்ச்சி - நிதியமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!
பாடசாலை பைகள் மற்றும் சப்பாத்துகளின் விலையை உடனடியாக குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பாடசாலையின் புதிய தவணை ஆரம்பமாகும் போது பெற்றோர்கள் மாணவர்களுக்கு பாடசாலை பைகள் மற்றும் சப்பாத்துக்களை வாங்கி கொடுப்பதில் சிரமத்தை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சில் கலந்துரையாடல்
அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தற்போது சப்பாத்துகள் மற்றும் பைகளின் இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், உள்ளூர் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகின்றன.
இவ்வாறான சூழலில் டொலரின் பெறுமதி வீழ்ச்சிக்கு ஏற்ப உள்ளூர் சந்தையில் பாடசாலை பைகள் மற்றும் சப்பாத்துகளின் விலைகள் குறைக்கப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
இதேவேளை வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத்துறை இந்த விவகாரத்தை ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என ரஞ்சித் சியம்பலாபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விலை குறையவில்லை என்றால் உடனடியாக இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவித்து விலையை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
