நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் (Photos)
2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று இரவு (13) வெளியாகியிருந்தது.
நாடு முழுவதும் 2 ஆயிரத்து 943 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன் 3 லட்சத்து 40 ஆயிரத்து 507 மாணவர்கள் பரீட்சை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலை மாணவன் உதயானந்தன் கபிசன் 189 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்றுள்ளார்.
இந் நிலையில் விசுவமடு விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலையில் 68 மாணவர்கள் பரீட்சை எழுதி 27 மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.
நூறு புள்ளிகளுக்கு மேல் 31 மாணவர்களும், 70 புள்ளிகளுக்கு மேல் 4 மாணவர்களும் புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.
விசுவமடு மேற்கில் வசித்து வரும் உதயானந்தன் கபிசன் என்ற மாணவன் 189 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
எதிர்காலத்தில் பொறியியலாளராக வேண்டும் என்ற குறிக்கோளில் தொடர்ந்தும் கல்வி கற்று வருவதாக மாணவன் தெரிவித்துள்ளார்.
விசுவமடு விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 88 மாணவர்கள் புலமைபரிசில் பரீட்சை எழுதி 39 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாக புதுக்குடியிருப்பு சிறீ சுப்பிரமணிய வித்தியாசாலை பாடசாலை இடம்பிடித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையில் 34 மாணவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் வெட்டுப்புள்ளியான 147 புள்ளிக்கு மேலான புள்ளிகளை பெற்று பரீட்சையில் சாதனை படைத்துள்ளார்கள்.
வவுனியா
வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி பாடசாலையில், 178 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் 98 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கும் அதிகமான புள்ளிகளை பெற்றுள்ளனர்.
இப் பெறுபேறானது 55.6 வீதமாக அமைந்துள்ளது.
அரவிந்தன் அபிரான் என்ற மாணவன் 192 புள்ளிகளையும் தயாகரன் கிருத்திகன் என்ற மாணவன் 191 புள்ளிகளையும் ஜெயக்குமார் காயத்திரி என்ற மாணவி 184 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு கல்குடா செங்கலடி மத்திய கல்லூரியை சேர்ந்த மாணவி ஜனார்த்தன் துலக்சா 178 புள்ளிகளை பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
செங்கலடி ரமேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த மாணவியே இப் பெறுபேற்றினைப் பெற்று தமது பெற்றோருக்கும் பாடசாலைக்கும், பாடசாலைச் சமூகத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளார்.
செங்கலடி மத்திய கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய 125 மாணவர்களில் 28 பேர் சித்தியடைந்துள்ளதுடன் ஜனார்த்தன் துலக்சா பாடசாலையில் அதிக புள்ளிகளை பெற்ற மாணவியாவார்.
மேலும், இம் முறை செங்கலடி மத்திய கல்லூரி பாடசாலையில், இப் புலமைப்பரிசில் பரீட்சையில் 100% சித்தி மட்ட பெறுபேற்றையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
கிளி /முருகானந்தா ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற தரம் -5 புலமை புலமைப்பரிசில் பரீட்சையில் 36 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 12 மாணவர்கள் வெட்டுபுள்ளிக்கு மேல் சித்தியடைந்துள்ளனர்.
இப் பாடசாலையில் கல்வி பயிலும், த. மோர்சிகன் -173, சி. ஆர்த்தினி -172, க. அகரன் -168, கே. கோஞ்சிகா -166, மூ. சுபா -165, பா. தர்சிகன் -157, க. கிசோக் -157, சு. ஜனுசா -157, த. வேணிதா -153, ஜோ. லோஜிதன் -152, க. தருணிகன் -149, ர. அபிசாயன் -148 ஆகிய மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கும் அதிகமாக புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
அத்துடன், 60 வருடங்களின் பின் கிளிநொச்சி பெரியகுளம் ஐயனார் வித்தியாலயத்தில் 164 புள்ளிகளைப் பெற்று சாந்தீபன் பிரவீன் என்ற மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
1960 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையில் 2015 ஆம் ஆண்டு 3 மாணவர்களும் 2017 ஆம் ஆண்டு ஒரு மாணவரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றிருந்தாலும் 60 வருடங்களுக்கு பின்னர் 164 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தமை என்பது இதுவே முதல் தடவையாகும்.
இப் பெறுபேற்றை பெற்ற மாணவன் சாந்தீபன் பிரவீன், இவ்வாறான நெருக்கடி வாய்ந்த சூழலில் பின் தங்கிய கிராமம் என புறம் தள்ளுபவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்,
எமது பாடசாலை எந்த அடைவுமட்டத்தை பெறவில்லை மற்றும் மாணவர் எண்ணிக்கை குறைவு என காரணம் காட்டி எம் கிராம பாடசாலையை மூடுவதற்கு ஆரம்ப பணிகள் இடம் பெற்றதனை என் பெற்றோர் மூலம் கேள்விப்பட்டேன்.
இதனால், எனது முயற்சியை கை விடாது தொடர்ந்து படித்தேன். எனக்கு ஆர்வம் ஊட்டிய பெற்றோர் மற்றும் வழிகாட்டி எனக்கு கற்பித்த அதிபர் ஆசிரியர்களுக்கும் குறிப்பாக சுதர்சன் ஆசிரியர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு பின் தங்கிய கிராமம் என்பதற்கும் கல்விக்கும் தொடர்பில்லை என் போன்று வளரத் துடிக்கும் சாதிக்க துடிக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள் எமக்கும் கரம் கொடுங்கள் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.