பிரதமரின் தலைமையில் 'சயுர ரக்கின ரெல்ல' மற்றும் எம்.ஈ.பி.எ அக்கடமி ஆரம்பம்
'சயுர ரக்கின ரெல்ல' (கடலை பாதுகாக்கும் அலை) தன்னார்வ செயலணி செயற்பாடு மற்றும் எம்.ஈ.பி.எ அக்கடமி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) தலைமையில் இன்று (11) முற்பகல் அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்பட்டது.
செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தல் தினத்தை முன்னிட்டு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
கடற்கரை தூய்மைப்படுத்தல் தன்னார்வ செயலணியின் செயற்பாடாக 'சயுர ரக்கின ரெல்ல' ஆரம்பிக்கப்படுவதுடன், இளைஞர் யுவதிகளுக்கு கடல்சார் தொழில் வாய்ப்புகள் குறித்து விழிப்பூட்டும் நோக்கில் கடல்சார் சூழல் பயிற்சி நிறுவனம் (MEPA Academy) ஆரம்பிக்கப்பட்டது.
'எம்.ஈ.பி.எ அக்கடமி' குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் சமுத்திர பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்துடன் பரிமாற்றிக் கொள்ளல் மற்றும் அக்கடமிக்கான உத்தியோகப்பூர்வ சின்னம் வெளியிடும் நிகழ்வும் பிரதமரின் தலைமையில் நடைபெற்றது.
சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தல் தினத்தை முன்னிட்டு வடிவமைக்கப்பட்ட இருபத்தைந்து ரூபாய் மதிப்பிலான தபால் முத்திரை மற்றும் முதல் நாள் உறை ஆகியன இதன்போது பிரதமருக்கு வழங்கப்பட்டது.
இலங்கைக்கான பதில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அமன்டா ஜவெல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதி (அபிவிருத்தி திட்டங்கள்) ரொபர்ட் ஜுகாம் ஆகியோரினால் இதன்போது இந்நாட்டின் கடல்சார் வலயங்களைப் பாதுகாப்பதற்கான அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கடல் பாதுகாப்பு கருவிகளைக் பிரதமரிடம் கையளித்தனர்.
இதன்போது 'சயுர ரக்கின ரெல்ல' பாடல் அடங்கிய இருவெட்டு, பாடகர்களான பாத்திய ஜயகொடி மற்றும் சந்துஷ் வீரமன் ஆகியோரினால் பிரதமருக்கு வழங்கப்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மொஹான் த சில்வா, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், குறித்த சந்தர்ப்பத்தில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜகத் P. விஜேவீர, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.