இலங்கைக்காக நினைவு தபால்தலைகளை வெளியிட்டுள்ள சவூதி அரேபியா
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், சவூதி அரேபியா நினைவு தபால்தலைகளை வெளியிட்டுள்ளது.
சவூதி அஞ்சல் வெளியிட்ட இந்த நினைவு தபால்தலைகளை, நேற்றையதினம் (09) ரியாத்தில் வைத்து சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரதிடம் கையளித்தார்.
வரலாற்றுத் தருணம்
இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு வரலாற்றுத் தருணம் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ரியாத்தில் நடைபெறும் 26வது ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பு பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தற்போது சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது, இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இருதரப்பு அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து இரு வெளிவிவகார அமைச்சர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

