ஜனாதிபதி கூறியது வெறும் அரசியல் வான வேடிக்கையே! அருட்தந்தை மா.சத்திவேல் காட்டம்
ஜனாதிபதி "இனவாதமற்ற, மதவாதமற்ற நாட்டை உருவாக்குவேன்" என்பதெல்லாம் வெறும் அரசியல் வான வேடிக்கையே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இன்று (26.02.2026) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
விகாராதிபதி கூறியது தவறு
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தையிட்டியில் தமிழர்களின் பூர்வீக காணிகளை படையினர் யுத்த காலப் பகுதியில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு நில்லாது. அந்நிலங்களை நிரந்தரமாகவே ஆக்கிரமிக்கும் நோக்கில் நாட்டின் நடைமுறை சட்டங்களையெல்லாம் மீறி விகாரை கட்டியதோடு தற்போது சட்டவிரோத விகாரையின் பிக்கு "விகாரை அமைந்துள்ள காணியை மீள கொடுக்க மாட்டேன்" எனக் கூறியுள்ளமை நாட்டின் சட்டத்திற்கும், மனித அறத்திற்கும், பௌத்த தர்மத்திற்கும், அதன் போதனைகளுக்கும் எதிரான குற்றமாகும். குற்றம் என தெரிந்தும் எத்தகைய அச்சமும் இன்றி இவ்வாறு கூறுவதற்கு பின்னால் சிங்கள பௌத்த இயக்க சக்திகளும், அதற்கு துணை இருக்கின்ற படையினரும், மறைமுக அரசியல் சக்திகளுமே காரணமாகும்.

இந்த கட்டமைக்கு எதிராக மாற்று கருத்தாளர்களும், நீதியை விரும்பும் பௌத்தர்களும், அவர்களின் அதி உயர் சமய பீடங்களும் எழாவிடின் நாட்டின் அமைதியை என்றுமே காண முடியாது என்பதோடு தற்போதைய ஜனாதிபதி "இனவாதமற்ற, மதவாதமற்ற நாட்டை உருவாக்குவேன்" என்பதெல்லாம் வெறும் அரசியல் வான வேடிக்கை வார்த்தைகளாகவே மட்டுமே இருக்கும் என்பதையும் எச்சரிக்கையாக கூற விரும்புகின்றோம்.
சட்டவிரோத விகாரையால் பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸாரின் அடவாடித்தனங்களுக்கு மத்தியில் இரண்டு வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி வருகையில் தீர்வுக்கான பல சுற்று பேச்சுவார்த்தை நிகழ்ந்த போதும் பலன் கிட்டாத நிலையிலேயே இறுதியில் கடந்த வாரம் சட்டவிரோத விகாரையின் பிக்கு, புத்தசாசன அமைப்பின் அதிகாரிகள் மற்றும் வேறும் அரசியல் அதிகாரிகள் கூடி பேச்சுவார்த்தை நடத்துகையிலேயே மேற்கண்டவாறு பிக்கு கூறியிருப்பது ஏமாற்றத்தை தருகின்றது.
அது மட்டுமல்ல இந்த பேச்சுவார்த்தைக்கு பாதிக்கப்பட்ட தரப்பினரை அரச தரப்பினர் அழைக்காமல் விட்டது ஏன்? என்பது மக்கள் மத்தியில் எழும் பிரதான கேள்வியாகும்.
தமிழர்களின் காணி விடுவிப்பு
தமிழர் தாயகத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுப்பதாக கூறும் இன்றைய ஆட்சியாளர்கள், சிங்கள பௌத்த அரச பயங்கரவாதத்தையும், அதன் காவலர்களாக உள்ள படையினரையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் நீண்ட காலம் புரையோடி போயுள்ள தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண நம்பிக்கையை ஊட்டும் முகமாகவும் விகாரையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலை நாட்ட இனியும் தாமதிக்கக்கூடாது என ஆட்சியாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.
சட்டவிரோத விகாரை பிரச்சனைக்கான தீர்வு எட்டப்படாமைக்கு முக்கிய காரணம் சிங்கள பௌத்த ஆதிக்க நிலையாளர்களினதும் அவர்களுக்கு துணை நிற்கும் படையினரதும் தன்மான பிரச்சினையாகும்.

அநீதி நிறைந்த தன்மானப் பிரச்சினையால் ஓர் இன சமூகம் தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாகி இன, சமய முரண்பாடு தொடர்ந்தும் கொதிநிலையிலேயே இருக்கும் சூழ்நிலையில் சமாதானம் பேசுவது நடைமுறை சாத்தியமற்ற செயலாகும். இது விடயத்தில் மல்வத்த, அஸ்கிரிய மற்றும் அமரபுர பௌத்த தலைமை பீடங்கள் பௌத்த தர்மத்தின் வழி நின்று நாட்டின் தலைமைத்துவங்களுக்கும்,பொது மக்களுக்கும் அறிவுரை வழங்குவது காலத்தின் கட்டாயமாகும்.
அதுவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் என்பதோடு சமயங்கள் மீதும் சமய தலைமைத்துவங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கையையும் உருவாக்கும்.
தையிட்டி விகாரை பிரச்சினைக்கான தீர்வு
மேலும், பௌத்த தலைமை பீடங்களோடு நாட்டின் ஏனைய சமயங்களின் தலைமைத்துவங்கள் குறிப்பாக தமிழர் தாயகத்தின் சமய தலைமைத்துவங்கள் உரையாடல்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்கின்றோம்.
தையிட்டி பிரச்சினை அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ள சூழ்நிலையில் சமய தலைமைகள் அமைதி நிலையில் இருப்பதோ, தூர நின்று வேடிக்கை பார்ப்பதோ சமய அறநெறிக்கு நலமாக அமையாது என்பதையும் கூறுகின்றோம்.

நாட்டு மக்களின் அமைதிக்கும், சகவாழ்வுக்கும், எதிர்காலம் தொடர்பான நம்பிக்கைக்கும் பாதகமான அரச, பொருளாதார, படை கட்டமைப்பு செயற்பட்ட சூழ்நிலையிலேயே மாற்று சமூகமாக சமயங்கள் தோன்றின என்பது மக்களுடைய நம்பிக்கையாகும்.
அத்தகைய மாற்று சமூகத்தின் பங்காளிகளாக, மாற்று சமூகத்தின் தலைமைத்துவங்களாக காலத்தின் கடமையை நிறைவேற்றி நீதி சமூகத்தை உருவாக்க செயற்படுகையில் அதற்கு துணை நிற்பது அனைவரது கடமையும் பொறுப்புமாகும்.
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri