இலங்கையை ரஷ்ய ஜனாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும்: சரத் பொன்சேகா விளக்கம் (Video)
ரஷ்ய உக்ரைன் யுத்ததின் தாக்கம் நமது நாட்டிற்கு இருக்குமென்று நான் நினைக்கவில்லை. அது உலகில் மறு பக்கத்தில் இடம்பெற்றுக்கொடுள்ளது. இதை காரணம் காட்டி இந்த அரசாங்கம் இங்கு பொருட்களில் விலைகளை உயர்த்தி மக்களை மேலும் கஷ்டத்தில் தள்ள முடியாது எனவும் அப்படியாயின் இந்த நாட்டை புட்டினுக்கு தான் பொறுப்பு கொடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்ததாவது,
இந்த அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. சுபீட்சத்தை காணமுடியாமல் உள்ளது. நாட்டு மக்கள் இன்று வேதனையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
மக்களுக்கு தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்ள முடியாமல் வரிசைகளில் நின்று காலத்தை செலவழித்துக்கொண்டிருக்கின்றார்கள். இதனால் மக்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றார்கள் . பாதைகளில் கோபத்தில் கத்துகிறார்கள்.
ரஷ்ய உக்ரைன் பிரச்சினையை எடுத்துக்கொண்டால் ,ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆளுவது உலக மரபின் படி ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. அவர்களுக்கிடையில் அரசியல் முரண்பாடுகள் இருக்கலாம். உக்ரைன் நேட்டோவில் இணைவதற்க்காக முயற்சிகளை எடுத்ததால் தான் இந்த அனைத்து பிரச்சினைகளும் ஆரம்பமானது.
ரஷ்யா அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதில் மும்முரமாக இருக்கின்றார்கள். இருந்தாலும் இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்க உலக மரபின் படி முடியாது.
ஆகவே இந்த அரசாங்கம் பிரச்சினைகளில் இருந்து விடுபட இவற்றை காரணமாக காட்ட முயற்சித்தால் நாம் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.