வடக்கு - கிழக்கு தொடர்பில் அண்ணாமலையின் கருத்து: கடுமையாக கண்டிக்கும் சரத் வீரசேகர
வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட வேண்டும், அது தமிழர் தாயகம் என மறைமுகமாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்த கருத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர வன்மையாக கண்டித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம் போர்க்கொடி தூக்கக்கூடாது என்பதற்காகவே வடக்கும், கிழக்கும் முழுவதுமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கைகளிலேயே உள்ளது எனும் அண்ணாமலையின் விசமத்தனமான கருத்துக்களை நாம் கண்டிக்கின்றோம்.

13 ஆவது திருத்தம்
அண்ணாமலை கூறுவது போல் 13 ஆவது திருத்தச் சட்டம் தீர்வாக அமையாது. ஏனெனில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் உளறுவதை இந்தியத் தரப்பினர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இது 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேரம் அல்ல. 13ஆவது திருத்தத்தை நாடாளுமன்றம் ஊடாக முழுமையாக இல்லாதொழிப்பதற்கான நேரமே கணிந்துள்ளது.
இலங்கையில் 13க்கு எதிராக பிக்குகள் கூட வீதியில் இறங்கியுள்ளமை
அண்ணாமலைக்குத் தெரியவில்லையா?, இது பௌத்த நாடு என்பதை அவர் மறந்துவிட்டாரா என கேள்வியெழுப்பியுள்ளார்.