புலம்பெயர் தமிழர்களின் பணத்திற்காக சரத் பொன்சேகா பொய்யுரைக்கின்றார்! – சரத் வீரசேகர
புலம்பெயர் தமிழர்களின் டொலர்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா பொய்யுரைப்பதாக பொதுபாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட காலத்திலும் சரத் பொன்சேகாவிற்கு பெருந்தொகையான வெளிநாட்டுப் பணம் கிடைக்கப் பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
புலிகளின் சார்பில் பேசிய காரணத்தினால் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் பகுதிகளில் கூடுதல் வாக்குகள் கிடைக்கப் பெற்றது எனவும், இராணுவத்தை காட்டிக் கொடுத்தவர் எனவும் சரத் பொன்சேகாவை, அமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
போர் வெற்றியில் கௌரவிக்கப்பட்ட ஐந்து பேரில் நானும் ஒருவன் என்பதனை மறந்துவிட வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளைக்கொடி சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் இவ்வாறு இனத்தையும், இராணுவத்தையும் காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்தியுள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுனில் ரட்நாயக்கவிற்கு வழங்கப்பட்ட தண்டனை சரியானது என சரத் பொன்சேகா கூறுவது புலம்பெயர் தமிழர்களின் பணத்தைப் பெற்றுக் கொண்டேயாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.