வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்ட இராணுவத்தளபதி கூறும் பல விடயங்கள்
அரசாங்கம் உண்மையான நடவடிக்கையை எடுத்து அரசியல் கைதிகளுக்கு நீதியை அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“2010ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி நள்ளிரவில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட போது, யுத்தத்தை நிறுத்திய இராணுவத் தளபதியை வெலிக்கடை சிறைக்குள் கொண்டு வருகின்ற நிலையில், போரில் ஈடுபட்ட எங்களை சிறைக்கு வெளியே கொண்டு செல்கின்றார்கள்” என்று ஓர் இளைஞன் கூறியதை அவதானித்தேன்.
இன்னுமொரு கதை உள்ளது. நான் வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு அழைத்துவந்த போது எனது அருகே என்னை படுகொலை செய்வதற்காக தற்கொலைதாரியை அழைத்து வந்த நபர் அருகில் அமர்ந்திருந்தார். மொரிஸ் என்கின்ற இளைஞன் அவர்.
அவர் இன்னும் என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசுவார். இன்னும் அவர் சிறையில் உள்ளார். ஆனால் வழக்கு முடியவில்லை.
அதுபோன்ற தாக்குதல்களுக்கு நான் முகங்கொடுத்துள்ள போதிலும் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன்.
சுமார் 15 வருடங்களாக அந்த இளைஞன் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தண்டனையே அவருக்குப் போதும்.
ஆகவே அரசாங்கம் உண்மையான நடவடிக்கையை எடுத்து அவர்களுக்கு நீதியை அளிக்கும்படி கோருகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.